India

ஒரு கொலையை மறைக்க 9 பேரைக் கொன்ற கொலையாளிக்கு தூக்கு தண்டனை - தெலங்கானா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

தெலங்கானா மாநிலம், வாரங்கல் மாவட்டம், , கோரிகுண்டாவில் கடந்த மே மாதம் உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிருடன் கிணற்றில் தள்ளி கொலை செய்யப்பட்டனர். இது, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த 20 ஆண்டுகளாக வாரங்கல்லில் உள்ள கீர்த்தி நகரில் மசூத் என்ற வடமாநில தொழிலாளி தனது குடும்பத்தினர் 6 பேருடன் வசித்து வந்துள்ளார். மேலும், மசூதின் மனைவி நிஷா, இவரது அக்கா ரபிகா, அவரது ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்களுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.

இதற்கிடையே மசூத்தின் உறவினர் ரபிகா என்பவருக்கும், சஞ்சய்குமாருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே ரபிகாவுக்கு ஒரு மகள் உள்ள நிலையில், அந்த மகளை அடைய நினைத்த அந்த சஞ்சய்குமார், ரபிகாவை அவருடைய சொந்த ஊருக்குக் கூட்டிச் செல்வதாகக் கூறி ரயிலில் அழைத்து சென்ற போது அந்த பெண்ணுக்குக் குளிர்பானத்தில் மயக்கமருந்தைக் கலந்துகொடுத்து மயங்கியதும் ஓடும் ரயிலில் இருந்து ரபிகாவை கீழே தள்ளி கொலை செய்துள்ளார்.

இதனையடுத்து ஒன்றும் தெரியாதது போல ஊருக்கு திரும்பிய சஞ்சய்குமாரிடம், ரபிகா எங்கே என்று நிஷா கேட்டதற்கு முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியுள்ளார். எனவே போலீசில் புகார் அளிக்க போவதாக கூறியுள்ளார். இதனால் நிஷா மற்றும் அவரது குடும்பத்தினரையும் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார் சஞ்சய்குமார்.

இதனையடுத்து கடந்த மே மாதம் 20-ந்தேதி குடும்பத்தில் உள்ள மசூத், நிஷா மற்றும் குழந்தை உள்ளிட்ட 9 பேருக்கு உணவில் மயக்கமருந்து கலந்து கொடுத்துள்ளார் அதை சாப்பிட்ட 9 பேரும் மயங்கி விழுந்துள்ளனர்.

உடனடியாக அந்த 9 பேரையும் சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீசி கொலை செய்துள்ளார். ஒரு கொலையை மறைக்க 9 பேரை கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளி சஞ்சய்குமாரை 72 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை வாரங்கல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தநிலையில்
நேற்று பரபரப்பு தீர்ப்பு கூறப்பட்டது. நீதிபதி கே.ஜெயகுமார், குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்துள்ளார். இந்த கொலை சம்பவம் நடந்து 5 மாதங்களில் தீர்ப்பு வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.