India

“ஆதார் அட்டையில் இருந்து தமிழ் மொழி வாசகம் நீக்கம்” : மோடி அரசின் இந்தி திணிப்பு குறித்து புகார்!

பா.ஜ.க அரசு நாடு முழுவதும் புதிய தேசிய கல்விக் கொள்கை உள்பட அரசின் அறிவிப்புகள் ஒவ்வொன்றிலும் இந்தி மொழித் திணிப்பை கையாண்டு வருகிறது.

குறிப்பாக அரசு அலுவலர்கள் மத்தியில், இந்தி பேசும் மாநிலத்தவர்களே இந்தியர்கள் என்கிற தவறான பிம்பத்தை பா.ஜ.க திட்டமிட்ட உருவாகி வருகிறது. அரசு நிகழ்ச்சி மற்றும் அறிவிப்பு தொடர்பாக வெளியிடப்பட்டும் கடிதங்களை இந்தியிலேயே வெளியிட்டு மொழித் திணிப்பை தொடர்ந்து செய்துவருகிறது.

இந்தச் சூழலில், தமிழகத்தில் வழங்கப்பட்ட ஆதார் அட்டையில், ‘எனது ஆதார் எனது அடையாளம்’ என்ற தமிழ் வாசகங்கள் நீக்கிவிட்டு இந்தியில் அச்சடிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

ஆதார் கார்டுகளை வழங்கும் மத்திய அரசு தனித்துவமான அடையாளத்துடன் புதிய தோற்றத்தில் ஆதார் அட்டையை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆதார் அட்டையை, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDIA) வெளியிட்டுள்ளது.

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வெளியிட்டுள்ள இந்த புதிய ஆதார் அட்டை, பாலிவினைல் குளோரைடு என்றழைக்கப்படும் பிவிசி அட்டையில் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த புதிய ஆதார் அட்டையை தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் ரூ.50 கட்டணம் செலுத்தி பெற்றுள்ளார். அப்போது அவருக்கு வழங்கப்பட்ட ஆதார் அட்டையில் இந்தி எழுத்துகளில் அச்சிடப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அதாவது, பழைய ஆதார் அட்டையில், “எனது ஆதார் எனது அடையாளம்” என்ற தமிழ் வார்த்தைகள் இடம்பெற்றிருக்கும். ஆனால் தற்போது வந்துள்ள ஆதார் அட்டையில் அந்த தமிழ் வாசகம் நீக்கப்பட்டுள்ளது.

அதற்குப் பதிலாக இந்தியில் அந்த வாசகம் அச்சிடப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அவரது தாய்மொழியை அழித்துவிட்டு இந்தியை திணிப்பது குறுக்கு வழி என அவர் புகார் தெரிவித்துள்ளார்.

மேலும் மத்திய அரசு ஆதார் அட்டையில் தமிழ் மொழியை நீக்கி இந்தியை திணித்த நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: இந்தி பேசாத மாநிலங்களில் பணியாற்ற இந்தி தெரிந்திருக்க வேண்டுமா? -கேடுகெட்ட அறிவிப்பு என பாஜகவை சாடிய வைகோ