India

தனது தவறுகளை மறைக்க நீட் தேர்வை வைத்து மாணவர்களை மிரட்டுகிறதா மோடி அரசு? - NTA அறிக்கையால் அதிர்ச்சி!

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில் அதில் பல்வேறு குளறுபடிகள் நிகழ்ந்திருப்பதாக நாடு முழுவதும் மாணவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

மாநிலவாரியான நீட் தேர்ச்சி பட்டியலில் தேர்வு எழுதியவர்கள் எண்ணிக்கையைவிட தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை பல மாநிலங்களில் கூடுதலாக இருந்தது அனைத்து தரப்பினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால் தேர்வு முடிவுகள் நீக்கப்பட்டு மீண்டும் பட்டியலிடப்பட்டது. குளறுபடிகள் அதோடு தீர்ந்துவிடவில்லை. பல மாணவர்கள் தங்களது விடைத்தாள் நகலில் விடை குறிக்கும் பகுதி மாறியிருப்பதாக புகார் தெரிவித்தனர்.

அரியலூர் மாவட்டம் தத்தனூர்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் தான் 680 மதிப்பெண்களுக்கு மேல் வரும் என எதிர்பார்த்த நிலையில் வெறும் 37 மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்ததால் அதிர்ச்சியடைந்தார்.

அந்த மாணவி 3 வினாக்களுக்கு மட்டுமே பதிலளிக்காத நிலையில், 7 வினாக்களுக்கு பதில் அளிக்கவில்லை என தேர்வு முடிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், இதனால் தனது விடைத்தாள் (OMR) மாற்றப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகம் எழுப்பினார்.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியைச் சேர்ந்த மாணவர் ஒருவர், அக்டோபர் முதல் வாரத்தில் வெளியிட்ட விடைத்தாள் நகலுக்கும், நீட் தேர்வு முடிவு வெளியான தினத்தன்று வெளியிடப்பட்ட விடைத்தாள் நகலுக்கும் வித்தியாசம் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

நாட்டின் பல பகுதிகளில் உள்ள கிராமப்புற மாணவர்களுக்கும் இதுபற்றி முறையிடுவதற்கான நடைமுறை குறித்து அறிந்திராததால் செய்வதறியாமல் திணறுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், மாணவர்களின் அச்சத்தைக் களைந்து நேர்மையான தேர்வு முறையை உறுதி செய்ய வேண்டிய தேசிய தேர்வு முகமையோ மாணவர்களை மிரட்டும் வகையில் நடந்துகொண்டுள்ளது.

நீட் தேர்வு முடிவில் எந்த குளறுபடியும் இல்லை என்றும் தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது தேசிய தேர்வு முகமை.

மேலும் தவறான தகவல்களை பரப்பும் மாணவர்களின் தேர்வு ரத்து செய்யப்படும் என்றும் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில் மருத்துவக் கனவோடு தேர்வெழுதிய மாணவர்களுக்கு தேர்வு முடிவுகளைக் கூட சரியான வகையில் வழங்க வக்கற்ற தேசிய தேர்வு முகமை, மாணவர்களின் தரத்தை உயர்த்துவதே தங்கள் நோக்கம் எனச் சொல்வதுதான் வேடிக்கை.

Also Read: “நீட் தேர்வில் ஏன் இத்தனை குளறுபடிகள்? யார் யார் இதன் பின்னணியில் இருக்கிறார்கள்?”- மு.க.ஸ்டாலின் கேள்வி!