India

இன்று உலக உணவு தினம் : மோடி ஆட்சியில் பட்டினியால் வாடும் நாடுகளின் பட்டியலில் 102வது இடத்தில் இந்தியா!

உலக உணவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்தியாவில் இன்னும் பலருக்கு மூன்று வேளை உணவு கிடைக்காத நிலைதான் நீடிக்கிறது. மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசால் இந்தியாவில் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக, இரண்டாவது முறையாக ஆட்சி செய்துவரும் பா.ஜ.க அரசால் நாட்டு மக்களின் அடிப்படைப் பிரச்னைகள் எதுவும் தீர்க்கப்படவில்லை. இந்நிலையில், கொரோனா பாதிப்பால், முடங்கிக்கிடந்த பொருளாதாரம் மேலும் மோசமடைந்து விட்டது. அதுமட்டுமல்லாது, ஊரடங்கு காலத்தில் வேலை இல்லாமல், வருமானமின்றி, பலரும் பட்டியால் உயிரிழந்தனர்.

இந்த சூழலில், ஆட்டோமொபையல், விவசாயத்துறை என அனைத்து துறைகளுமே மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்து வருகின்றன. இந்த பின்னடைவினால் கோடிக்கணக்கான மக்கள் வேலைவாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். பல மாநிலங்களில் உணவு கிடைக்காமல், மக்கள் பசியால் இறந்துபோகும் அவல நிலை உருவாகியுள்ளது.

அரசு சார்பில் குழந்தைகளுக்கு வழங்கும் சத்துணவு கூட வட மாநிலங்களில் முறையாக வழங்கப்படவில்லை. அதுதொடர்பான புகார்கள் ஊடகங்களில் தொடர்ந்து வெளிவந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில், சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் இந்தியாவில் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம், உலக மக்களின் பசியைப் போக்கி முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்காகவும், மக்களின் உணவுப் பற்றாக்குறையை மதிப்பிட்டு அதற்கான விழிப்புணவு மற்றும் தீர்வை அறிவிப்பதற்காகவும் உலகில் உள்ள 117 நாடுகளில் ஆய்வு மேற்கொண்டு ‘உலக அளவிளான பட்டினி மதிப்பீடு’ என்ற பெயரில் ஒரு பட்டியலை வெளியிடும்.

குழந்தைகளுக்குத் தேவையான சத்துள்ள சரிவிகித உணவு கிடைக்கிறதா என்றும், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வயதிற்கு ஏற்ப எடை மற்றும் உயரம் கொண்டிருக்கிறார்களா என்றும் ஆய்வு செய்து, குழந்தைகள் இறப்பு விகிதம் போன்றவற்றை வைத்தும் இந்த பட்டினி குறீயிடு கணக்கிடப்படும்.

அதன்படி, சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. அதில், 117 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா 102வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 2015ம் ஆண்டு 93வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 102வது இடத்துக்குச் சென்றுள்ளது. மோசமான 45 நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் ஒன்று.

இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை 66வது இடத்திலும், வங்காளதேசம் 88வது இடத்திலும், பாகிஸ்தான் 94வது இடத்திலும் உள்ளன. மேலும் பொருளாதாரத்தில் மிகவும் மோசமாக இருக்கும் ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா, கானா, கென்யா, எத்தியோப்பியா ஆகிய நாடுகள் இந்தியாவை விட முன்னேறிய நிலையில் உள்ளன.

நுகர்வோரிடம் வாங்கும் சக்தி குறையவில்லை; பொருளாதார மந்த நிலை இல்லை என பா.ஜ.க-வினர் தொடர்ந்து கூறிவந்தாலும், உலக நாடுகளில் உள்ள முக்கிய அமைப்புகள் இந்தியாவின் வளர்ச்சிக் குறைபாடு, பொருளாதார வீழ்ச்சி பற்றி அம்பலப்படுத்தி வருகின்றன. இதன் மூலம், மோடி ஆட்சியில் மக்கள் மிகுந்த துயரங்களைச் சந்தித்து வருவது தெளிவாவதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Also Read: மோடி ஆட்சியில் தொடரும் திண்டாட்டங்கள் : வேலையின்மை 6.1 சதவிகிதமும்; தற்கொலை 3.4 சதவிகிதமும் அதிகரிப்பு!