India

“அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் இல்லை” : மக்கள் கோரிக்கையை ஏற்று முடிவைக் கைவிட்டது கேரள அரசு !

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்ட முதல் மாநிலமான கேரளாவில், தொற்று தடுப்பு நடவடிக்கை மிகத் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா காலத்தில் மக்களுக்கு தேவையால நலத்திட்ட உதவிகள் மற்றும் மருத்துவ தேவைகளை முறையாகச் செய்துவரும் கேரள அரசு, தற்போது கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.

குறிப்பாக, தொற்று அதிகரித்தபோது துரிதமாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் இறங்கியது; இன்னும் அந்த பணிகளை தொடர்ந்து மேற்கொள்வதால், அரசு கஜானா காலியாகி வருகிறது. மேலும் அரசு அறிவித்த ஊரடங்கு இன்னும் நீடித்து வருவதால், வருமானம் குறைந்து நலத்திட்டங்களை கூட செய்யமுடியாத நிலைக்கு கேரள அரசு சென்றுள்ளது.

இதனிடையே மாநிலங்களுக்கு தரவேண்டிய ஜி.எஸ்.டி தொகையையும் கொரோனா காலத்திலேயே ஒப்படைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால், மத்திய அரசு ஜி.எஸ்.டி நிலுவைத் தொகைக்கு பதிலாக, வங்கிகளில் கடன் பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்தது.

இந்நிலையில், கேரள அரசு, அரசு ஊழியர்களின் ஒருமாத சம்பளத்தை நிறுத்தி வைக்க அரசு தீர்மானித்த முடிவை கைவிடுவதாக அறிவித்துள்ளது. முன்னதாக அரசு ஊழியர்களின் ஒருமாத சம்பளத்தை நிறுத்தி வைக்க அரசு தீர்மானித்தது. அதன்படி, ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை அரசு ஊழியர்களின் ஒருமாத சம்பளம் தவணைகளாக நிறுத்தி வைக்கப்பட்டது. இது தவிர மேலும் ஒருமாத சம்பளத்தை நிறுத்தி வைக்க அரசு தீர்மானித்திருந்தது.

அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனிடையே அரசு ஊழியர்களும் கொரோனா காலத்தில் சம்பளம் பிடிப்பது குடும்பத்தில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதால் அரசு ஊதியக்குறைப்பு முடிவை அரசு கைவிட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இந்த கோரிக்கைகளை பரிசீலனை செய்த கேரள அரசு, ஊழியர்களின் ஒருமாத சம்பளத்தை நிறுத்தி வைக்கும் முடிவை திரும்பப்பெற தீர்மானித்துள்ளது. மேலும், கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை நிறுத்தி வைக்கப்பட்ட அரசு ஊழியர்களின் ஒருமாத சம்பளத்தை அடுத்த ஏப்ரல் மாதத்தில் வருங்கால வைப்புநிதியில் இணைக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

மேலும், பி.எப். இல்லாதவர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் பணத்தை கணக்கில் திருப்பித்தரவும் முடிவு செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாது, பிடித்தம் செய்யப்பட்ட சம்பளம் மற்றும் இனிமேல் பிடிக்க உள்ள தொகையை, எந்த வழியில் திரும்ப வழங்குவது என்பது குறித்து முடிவு செய்ய அரசு ஊழியர் சங்க அமைப்புகளுடன் கலந்துரையாட அமைச்சரவை தீர்மானித்திருந்தது. இதுதொடர்பாக முழுமையான உத்தரவு விரைவில் வெளியாகும் என கேரள அமைச்சரவை தரப்பில் கூறப்படுகிறது.

Also Read: “சூப்பர்ஹீரோ பினராயி” கொரோனாவை வீழ்த்தும் கேரளா: எப்படி நிகழந்தது அதிசயம்?- பாராட்டும் வாஷிங்டன் போஸ்ட்!