India

14 மணி நேரமாக பிரசவ வலியில் துடித்த பெண்ணுக்கு மருத்துவமனையில் அனுமதி மறுப்பு : இரட்டைக் குழந்தைகள் பலி!

கேரளா மாநிலத்தின் மலப்புரம் மாவட்டம் கோண்டோட்டியைச் சேர்ந்த தஸ்னி என்ற 22 வயது பெண்ணுக்குச் சனிக்கிழமை அதிகாலையில் பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இந்த பெண்ணுக்கு கொரோனாவை காரணம் காட்டி மூன்று மருத்துவமனைகளில் அவரை அனுமதிக்க மறுத்துள்ளனர்.

மேலும் அவர்கள் சென்ற மருத்துவமனைகளில் கோவிட் -19 நெறிமுறைகளை மேற்கோள் காட்டி பிரசவ வலியில் துடித்த அந்தப் பெண்ணுக்குச் சரியான நேரத்தில் சிகிச்சை தொடராமல் மருத்துவமனையில் மறுத்துள்ளனர்.

அந்தப் பெண் மலப்புரம் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு இடையே பிரசவ வலியில் 14 மணி நேரமாக அலைக்கழிக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், அந்தப் பெண்ணின் கணவர் ஷெரிப் தன் மனைவியை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பின்னர் அந்தப் பெண்ணுக்கு உடனடியாக சிசேரியன் செய்யப்பட்டது. ஆனால் அந்த பெண்ணுக்குப் பிரசவத்தின்போதே இரட்டைக் குழந்தைகள் இறந்துவிட்டது தெரியவந்தது. தொடர்ந்து ஆபத்தான நிலையில் உள்ள அந்தப் பெண் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவத்தை அறிந்த கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் விசாரணைக் குழு அமைத்து இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

Also Read: பாலியல் வல்லுறவுக்குள்ளாகி கடுமையாகத் தாக்கப்பட்ட 19 வயது தலித் பெண் பலி : உ.பி-யில் தொடரும் கொடூரங்கள்!