India

ஊரடங்கு காலத்தில் குழந்தைகளுக்கு தடுப்பு மருந்துகள் முறையாக வழங்கப்பட்டதா? - கனிமொழி MP கேள்விக்கு பதில்!

ஊரடங்கு காலத்தில் குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு போலியோ உள்ளிட்ட தடுப்பு மருந்துகள் முறையாக வழங்கப்பட்டனவா என தி.மு.க எம்.பி கனிமொழி எழுப்பிய கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பதிலளித்தார்.

நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி கனிமொழி, “பொதுமுடக்க காலமான ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு போலியோ உள்ளிட்ட தடுப்பு மருந்துகள் முறையாக வழங்கப்பட்டனவா?” எனக் கேள்வி எழுப்பினார்.

கனிமொழி எம்.பி எழுப்பிய கேள்விக்கு மத்திய குடும்பநலம் மற்றும் சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஷ்வின் குமார் சவுபே எழுத்துபூர்வமாக பதில் அளித்தார்.

அதில், “மத்திய அரசிடம் உள்ள புள்ளிவிபரங்களின்படி, ஏப்ரல் முதல் ஜூன் 2019 வரையில் 58,14,588 குழந்தைகளுக்கு முழுமையான தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.

2020 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் 44,13,896 குழந்தைகளுக்கு தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. எத்தனை குழந்தைகள் கொரோனா பொதுமுடக்கக் காலத்தில் தடுப்புமருந்துகளை தவற விட்டுள்ளனர் என்ற புள்ளி விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

கொரோனா பொதுமுடக்கக் காலத்தில் கர்ப்பிணிகள், குழந்தைகள் ஆகியோருக்கு தடுப்பு ஊசிகளும், மருந்துகளும் எப்படி வழங்குவது என்பது குறித்து மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுரைகள எழுத்துபூர்வமாகவும், காணொளி வாயிலாகவும் மத்திய அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுகுறித்த வழிகாட்டுதல்களும் மத்திய சுகாரத்துறையின் இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் எடுக்கப்பட்ட நடவடிக்கைள் பற்றியும், இதை செயல்படுத்துவதில் மாநில அரசுகள் சந்திக்கும் சிக்கல்கள் குறித்தும் கலந்தாய்வு கூட்டங்கள் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: உயர்சாதி ஏழைகளால் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் OBC பிரிவினர்: சுப்ரீம் கோர்ட் விசாரணை கோரும் டி.ஆர்.பாலு!