India

“மத்திய அரசு பணிகளில் தமிழக பட்டதாரிகளுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கவேண்டும்” : திருச்சி சிவா வலியுறுத்தல்!

நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தின் போது மாநிலங்களவையில் பேசிய தி.மு.க எம்.பி திருச்சி சிவா, மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் 90 சதவீத இடங்களை உள்ளூர் பட்டதாரிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இதுதொடர்பாக தி.மு.க எம்.பி. திருச்சி சிவா பேசுகையில், “ரயில்வே, வருமான வரி, பெட்ரோலியம் உள்ளிட்ட மத்திய அரசுப் பணிகளில் தமிழக பட்டதாரிகளுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

குறிப்பாக, மத்திய அரசுப் பணிகளில் குறைந்த அளவிலேயே தமிழகத்தில் இருந்து நிரப்பப்படுகிறது. அதனால் தான் தமிழக இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும் வகையில் மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் 90 சதவீத இடங்களை உள்ளூர் பட்டதாரிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், “தமிழகத்தில் 84 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலங்களில் பதிவு செய்துவிட்டு வேலைக்காக காத்திருக்கின்றனர். மேலும் யு.பி.எஸ்.சி தேர்வுகளிலும் கூட தமிழகத்தைச் சேர்ந்த பட்டதாரிகள் அதிக அளவில் மதிப்பெண் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.

ஆனால், தற்போது தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் உள்ள பணி இடங்களை நிரப்ப எஸ்.எஸ்.சி தேர்வுகள் நடத்தப்படுகிறது. எஸ்.எஸ்.சி மூலம் நடத்தப்பட்ட அகில இந்திய தேர்வுகளில் தமிழகத்தில் இருந்து வெறும் 197 இடங்களுக்கு மட்டுமே இடம் கிடைத்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “மாநிலங்களுக்கு உதவாமல் வேறு எதற்குத்தான் PM Cares நிதி இருக்கிறது?” - சஞ்சய் ராவத் எம்.பி கேள்வி!