India

மருத்துவ மேற்படிப்பில் மாணவர் சேர்க்கை : பட்டியலை சமர்ப்பிக்க செப்.25 வரை அவகாசம் - உயர்நீதிமன்றம் ஆணை!

மருத்துவ மேற்படிப்பில் மாணவர் சேர்க்கையை இறுதி செய்யக் கூடாது என்ற உத்தரவை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ மேற்படிப்பில் உள்ள காலியிடங்களுக்கு கலந்தாய்வு நடத்தி, தங்களுக்கு மாணவர் சேர்க்கை வழங்கக் கோரி மருத்துவர்கள் அரவிந்த், கீதாஞ்சலி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையை ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் வரையறுத்துள்ளதால், அந்த காலக்கெடுவை நீட்டிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தை அணுகும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தார். மேலும், மேற்படிப்பு மாணவர் சேர்க்கையை இறுதி செய்யக் கூடாது என கல்லூரிகளுக்கு அறிவுறுத்தும்படி, தமிழக அரசுக்கும் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கால நீட்டிப்பு கோரிய தமிழக அரசின் மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்த நீதிபதி, மருத்துவ மேற்படிப்பில் மாணவர் சேர்க்கையை இறுதி செய்யக் கூடாது என்ற உத்தரவை நீக்கி உத்தரவிட்டார்.

மேலும், மேற்படிப்பில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் பட்டியலை இந்திய மருத்துவ கவுன்சிலிடம் சமர்ப்பிக்க தமிழக அரசுக்கு, செப்டம்பர் 25 வரை அவகாசம் வழங்கியும் உத்தரவிட்டார்.

அப்போது, மனுதாரர்கள் தரப்பில் நீட் தேர்வில் தங்களைவிட குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு இடமளிக்கப்பட்டுள்ளதால், சட்டவிரோதமாக நடைபெற்றுள்ள மாணவர் சேர்க்கையை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.

மனுதாரர்களின் கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் விளக்கம் அளிப்பதற்காக வழக்கை செப்டம்பர் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

Also Read: #NEET : “மக்கள் பாதை போராட்டத்திற்கு ஆதரவு : சாகும்வரை உண்ணாவிரதம் வேண்டாம்” - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!