India

“புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்ததை உலகமே பார்த்தது; மோடி அரசுக்கு தெரியாதா?” - ராகுல் காந்தி சாடல்!

கொரோனா ஊரடங்கின்போது எவ்வளவு புலம்பெயர் தொழிலாளர்கள் இறந்தார்கள் என்பதை கணக்கிடவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளதை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அறிவித்திருந்தது. இந்த ஊரடங்கினால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலரும் வாழ்வாதாரம் இழந்ததால், பல நூறு கி.மீ. தூரம் நடந்தே சொந்த ஊர்களுக்குச் சென்றனர்.

அவர்களில் பலரும் வழியில் விபத்து, சோர்வு, பட்டினி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பலியாகினர். அவர்களைக் காக்க ஆளும் பா.ஜ.க அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் நேற்று, ஊரடங்கு காலத்தில் தொழிலாளர்கள் தங்கள் வீடுதிரும்பும்போது பலியான விவரங்கள் அளிக்கும்படி கேட்டனர்.

அதற்கு மத்திய தொழிலாளர் துறை இணை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார் அளித்த எழுத்துபூர்வமான பதிலில், “இதுகுறித்த விவரங்களை அரசு சேகரிக்கவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த பதில் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “ஊரடங்கு காலத்தில் எவ்வளவு புலம்பெயர் தொழிலாளர்கள் இறந்தார்கள் என்ற கணக்கு மோடி அரசிடம் இல்லை. எத்தனை பேர் வேலையிழந்தனர் என்ற கணக்கும் இல்லை. நீங்கள் கணக்கிடவில்லை எனில், ஒருவரும் உயிரிழக்கவில்லை அப்படித்தானே?

உயிர்கள் பறிபோனதைப் பற்றி அரசுக்கு அக்கறை இல்லை என்பதுதான் துயரம் நிறைந்தது. புலம்பெயர் தொழிலாளர்கள் மரணித்ததை உலகமே பார்த்தது. ஆனால் மோடி அரசுக்கு தெரியவில்லை” எனச் சாடியுள்ளார்.

Also Read: பிரதமர் மோடி மயில்களுடன் பிஸியாக இருப்பதால், நம்மை நாம்தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் - ராகுல் காந்தி