India

“கலவரத்தை தூண்டியவர்கள் மீது நடவடிக்கை இல்லை.. டெல்லி காவல்துறையின் பாரபட்சம்” - ரிபைரோ பபரபரப்பு கடிதம்!

டெல்லியில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்து வந்த சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டத்தின்போது, மதவெறியர்களின் தூண்டுதலால் கலவரம் உருவானது. டெல்லியின் வடகிழக்கு பகுதியில் நடந்த போராட்டம் கலவரமாக மாறியது.

டெல்லியில் நடைபெற்ற இந்தக் கலவரத்தில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். 50க்கும் அதிகமான வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. இந்தக் கலவரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மத்திய பா.ஜ.க அரசின் அதிகாரத்தின் கீழ் செயல்படும் டெல்லி காவல்துறை, கலவரத்திற்கு ஆதரவளித்ததாகவும், போராட்டத்தில் ஈடுபட்டோரை தாக்கியதோடு, அவர்கள் மீதே நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் கடுமையாக குற்றம்சாட்டப்படுகிறது.

இந்நிலையில், அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீதே காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது வருத்தமளிக்கிறது என்று முன்னாள் போலிஸ் அதிகாரி ஜூலியோ ரிபைரோ குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

91 வயதாகும் ஜூலியோ ரிபைரோ புகழ்பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி. காவல்துறையில் பல்வேறு பணிகளை ஆற்றியுள்ள இவர் தற்போது மும்பையில் வசித்து வருகிறார். இந்நிலையில் ரிபைரோ, டெல்லி காவல்துறை ஆணையர் ஸ்ரீவாஸ்தவாவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், “கனத்த இதயத்துடன் இந்தக் கடித்தை உங்களுக்கு எழுதுகிறேன். இந்திய காவல்துறையின் பெருமைக்குரிய முன்னாள் உறுப்பினராக இந்த கடிதத்தின் மூலம் நான் உங்களுக்கு சில கோரிக்கைகளை முன்வைக்க விரும்புகிறேன்.

தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்பட்டுள்ள 753 முதல் தகவல் அறிக்கைகள் தொடர்பான விசாரணையை நியாயமான முறையில் நடத்துவதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும்.

டெல்லி காவல்துறை, அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீதே வழக்குப் பதிவு செய்துள்ளது. ஆனால் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்துகளை வெளிப்படுத்தியவர்கள், கலவரத்தை தூண்டியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது அரசியல் சாராத, என்னைப் போன்ற நடுநிலையாளர்களை மிகவும் வேதனைப்படுத்தியுள்ளது.

கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர், பர்வேஷ் வர்மா போன்றோர் ஏன் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை? நீதிமன்றங்களில் ஏன் இவர்கள் மீது வழக்கு தொடரப்படவில்லை என்று ஆச்சரியமாக இருக்கிறது. அதேசமயம், அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், இஸ்லாமிய பெண்கள் பல மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

காவல்துறை பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், அரசியல் சாசனச் சட்டத்திற்குட்பட்டு நடக்க வேண்டும். சட்டங்களைக் காக்கும் வகையில் செயல்பட வேண்டும். மதம், ஜாதி, அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்பட வேண்டிய கடமையிலிருந்து அவர்கள் தவறக் கூடாது.

உங்களது தலைமையில் உள்ள டெல்லி காவல்துறையினர், தாங்கள் பதவியேற்றபோது எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கேற்ப செயல்படுகிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டிய கடமை உங்களுக்கு உள்ளது” என அந்தக் கடிதத்தில் ரிபைரோ குறிப்பிட்டுள்ளார்.

Also Read: “டெல்லி வன்முறையில் காவல்துறை சதி - முஸ்லிம்கள் மீது நடந்த மனித உரிமை மீறல்கள்” : அதிர்ச்சி ரிப்போர்ட்!