India

“மோடி அரசின் பிடிவாதத்தால் மாணவர்களின் கனவு பாழானது”: கொரோனா காரணமாக 26% மாணவர்கள் JEE தேர்வு எழுதவில்லை!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. இந்த சூழலில், நாட்டில் உள்ள கல்வி நிலையங்கள் மூடப்பட்டு மாணவர்கள் பல்வேறு நெருக்கடி மத்தியில் ஆன்லைன் வழியாக பாடம் படித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், வரும் கல்வியாண்டில் நடக்கவிருந்த தேர்வுகள் பல ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், மாணவர்கள் நலன் பற்றி கவலைப்படாமல் மத்திய அரசு மட்டும், தனது அதிகாரத்திற்கு கீழ் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளை கட்டாயம் நடத்தியே தீருவோம் என பிடிவாதமாக செயல்படுகிறது.

குறிப்பாக, உச்சநீதிமன்றம் நீட், ஜே.இ.இ தேர்வுகளை நடத்த தடைவிதிக்க மறுத்ததைத் தொடர்ந்து தேர்வுகளை நடத்த, மத்திய அரசின் தேசிய தேர்வு முகமை தயாராகி வருகிறது. இதன்படி, செப்டம்பர் 1 முதல் 6ம் தேதி வரை நடைபெற்ற பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுகளுக்கு 8 லட்சத்து 58 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.

ஆறு நாட்களாக நடைபெற்ற தேர்வில் 26% மாணவர்கள் தேர்வு எழுதச் செல்லவில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு இரண்டு முறை நடைபெற்ற தேர்விலும், கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்ட தேர்விலும் 94% மாணவர்கள் கலந்து கொண்டனர்.

ஆனால், போக்குவரத்து இல்லாதது, கொரோனா அச்சம் உள்ளிட்ட காரணங்களால் 74% மாணவர்கள் மட்டுமே இந்த முறை தேர்வினை எழுதியுள்ளனர். 26% மாணவர்களால் ஜெ.இ.இ. தேர்வுக்குச் செல்ல முடியவில்லை என்பது தெரியவந்துள்ளது.

மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் போனதற்கு மோடி அரசே முழுமுதற் காரணம் என கல்வியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதுமட்டுமின்றி கொரோனா காலத்தில் மாணவர்கள் நலனில், அக்கறைக் காட்டாமல் மோடி அரசு பிடிவாதமாக தேர்வு நடத்தியதால் மாணவர்களின் கனவு பாழானதாக கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Also Read: “ஆக்ஸ்போர்டு தடுப்பூசி ஆய்வினை இந்தியாவில் ஏன் நிறுத்தவில்லை” : மருந்து கட்டுப்பாட்டு ஆணையர் நோட்டீஸ்!