India

“தன்னிறைவிலிருந்து வெளிவந்து அர்த்தமுள்ள எதையாவது செய்யவேண்டும்” - மோடி அரசுக்கு ரகுராம் ராஜன் அறிவுரை!

இந்திய அரசாங்கமும் அதன் அதிகாரிகளும், கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டிய காலகட்டம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ரிசர்வ வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவு வரலாறு காணாத வகையில் குறைந்துள்ளது. 23.9% சதவீதம் அளவுக்கு ஜி.டி.பி குறைந்துள்ளது அனைவரும் கவனிக்கவேண்டிய ஒரு முக்கியமான விஷயம் என்றும் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

linkedIn தளத்தில் இதுபற்றிக் குறிப்பிட்டுள்ள ரகுராம் ராஜன், கோவிட் 19 நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மற்ற இரண்டு நாடுகளான அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்டவை பாதிக்கப்பட்டிருந்தாலும் இந்தியாதான் அவற்றை விட மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று இன்னும் இந்தியாவில் அதிகரித்துக்கொண்டே இருப்பதால் உணவகங்கள் போன்ற நிறுவனங்களில் வியாபாரம் குறைவாக இருக்கும் என்றும் மேலும் அவற்றைச் சார்ந்திருக்கும் வேலைவாய்ப்புகளும் இல்லாமல் போகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“இந்திய அரசாங்கமும் அதன் அதிகாரிகளும் எப்போதும் போல் கடுமையாக உழைத்துக்கொண்டிருந்தாலும், அவர்கள் இப்போதிருக்கும் தன்னிறைவிலிருந்து வெளிவந்து உருப்படியான செயல்பாடுகளைச் செய்யவேண்டும். இந்த ஜி.டி.பி எண்களில் ஏதேனும் நம்பிக்கை தரக்கூடிய விஷயம் இருக்குமென்றால் அது இதுதான்.” எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் “இந்தியப் பொருளாதாரத்தைப் படுக்கையில் கிடந்து நோய்க்கு எதிராகப் போராடும் ஒரு நோயாளியைப் போல் நீங்கள் நினைத்தீர்கள் என்றால் அதைக் காப்பாற்ற மீட்பு நடவடிக்கைகளைக் காலம் தாழ்த்தாமல் அரசு மேற்கொள்ளவேண்டும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Also Read: “ப்ளீச்சிங் பவுடர் முதல் முகக்கவசம் வரை அ.தி.மு.க அரசு ஊழல் : பா.ஜ.க உடந்தையா?” - மு.க.ஸ்டாலின் விளாசல்!