India

“ஜி.எஸ்.டி என்பது வரி அல்ல; ஏழை மக்களின் மீதான தாக்குதல்” - ராகுல் காந்தி சாடல்!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு இந்தியாவின் முறைசாரா பொருளாதாரத்தின் மீதான இரண்டாவது தாக்குதல் தவறான ஜி.எஸ்.டி வரி விதிப்பே எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

ஜி.எஸ்.டி என்பது ஒரு வரி அமைப்பு அல்ல அது இந்திய ஏழைகளின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் நாட்டு மக்களை ஜி.எஸ்.டி வரிக்கு எதிராக ஒன்றிணையவேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் இந்த விஷயங்களை ராகுல் தெரிவித்துள்ளார். “ஜி.எஸ்.டி-யை காங்கிரஸ் கூட்டணி அரசே முதலில் முன்வைத்தது. ஆனால் பா.ஜ.க அரசின் ஜி.எஸ்.டி என்பது முற்றிலும் மாறுபட்டது. 28% சதவீதம் வரையிலான நான்கு வெவ்வேறு வகையான வரி விதிமுறைகள் கொண்ட அது புரிந்துகொள்வதற்கு மிகவும் சிரமானது.” எனவும் அந்த வீடியோவில் அவர் தெரிவித்துள்ளார்.

“சிறிய மற்றும் நடுத்தர வணிகர்கள் இந்த வரியைச் செலுத்தமுடியாது. இந்த வேலைக்காகப் பெரிய நிறுவனங்கள் 5 முதல் 15 கணக்காளர்களை வைத்துக்கொண்டுள்ளனர். ஏன் 4 வெவ்வேறு வகையான வரி விதிப்பு உள்ளன? ஏனென்றால் இந்த அரசு ஜி.எஸ்.டியை சுலபமாக தங்களுக்கு ஏற்றார்போல் மாற்ற விரும்புகிறவர்களுக்கு மாற்றவும், முடியாதவர்கள் எதுவும் செய்யமுடியாத சூழல் நிலவுவதற்கும் விரும்புகிறது.” எனவும் ராகுல் தெரிவித்துள்ளார்.

”யாரெல்லாம் இதை மாற்ற முடியுமென்றால் இந்தியாவின் 15 முதல் 20 மிகப்பெரிய நிறுவனர்களால் முடியும். வரியை எப்படி மாற்ற வேண்டும் என்றாலும் அதற்கு ஏற்றார்போல் அவர்களால் மாற்ற முடியும்.” எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், இந்தியாவின் ஜி.டி.பி எதிர்மறையில் சென்றதற்கு மற்றொரு முக்கிய காரணம் ஜி.எஸ்.டி. லட்சக்கணக்கான சிறு வணிகம், கோடிக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலம் மற்றும் வேலைவாய்ப்பு, மாநிலங்களின் பொருளாதார நிலைமை என ஏராளமானவற்றை அழித்துவிட்டது ஜி.எஸ்.டி. ஜி.எஸ்.டி என்றால் பொருளாதார பேரழிவு எனப் பதிவிட்டுள்ளார்.

Also Read: வேலைவாய்ப்பின்மை... ஜி.டி.பி வீழ்ச்சி : மோடி உண்டாக்கிய பேரழிவுகள் - ராகுல் காந்தி பட்டியல் வெளியீடு!