India

“தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை மேற்கொண்டால் செலவை அரசே ஏற்கும்”-புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு!

புதுச்சேரியில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அனைத்து தனியார் மருத்துவமனைகளும் தேவையான உபகரணங்களை பெற்று குறைந்தபட்சம் 100 பேருக்கு உமிழ்நீர் பரிசோதனை செய்ய அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பேசியதன் விவரம் பின்வருமாறு:

“தனியார் மருத்துவமனைகளின் குறைகளைக் கண்காணிக்க 9 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் புதுச்சேரியை சேர்ந்த நோயாளிகளுக்கு சிகிச்சைக்கான நிதியை மாநில அரசு வழங்கும்.

புதுச்சேரியில் கொரோனா நோய்த்தொற்றை கண்டறிய வீடு வீடாகச் சென்று பரிசோதனை செய்வது, முகாம்கள் அமைத்து பரிசோதனை, கிராமப்புறங்களில் உள்ள சுகாதார நிலையம் மூலம் பரிசோதனை என பரிசோதனை செய்ய அரசு முடிவெடுத்துள்ளது. இதுபோன்று புதுச்சேரியில் 12 மையங்களில் தற்போது பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருமண நிகழ்ச்சிகளில் யாரும் முகக் கவசம் அணிவது இல்லை. இதனால் நோய்த் தொற்று பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை ஒழிக்கமுடியாது. ஆதலால் பொதுமக்கள் வெளியே வரும்போது முகக்கவசம் அணியவேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

தற்போது அரசு உதவி பெறும் ஆசிரியர்கள் தெருவில் இறங்கி போராடி வருவது துரதிஷ்டமானது. தமிழக அரசு, கர்நாடக அரசு, கேரள அரசு உள்ளிட்ட பல அண்டை மாநில அரசுகள் தனியார் உதவிபெறும் ஆசிரியர்களுக்கு 100% சம்பளத்தை வழங்கி வருகிறது.

Also Read: “2021ன் மத்தியில் வரை கொரோனா தடுப்பூசி பரவலாக கிடைக்க வாய்ப்பில்லை” - உலக சுகாதார அமைப்பு தகவல்!

ஆனால் தனியார் பள்ளிகள் அரசுக்கு கட்ட வேண்டிய பணத்தை கட்டினால்தான் வழங்க முடியும் என்று துணைநிலை ஆளுநர் கூறியுள்ளார். கோப்புகளை பல தடவை திருப்பி அனுப்பி வருகிறார் . உண்மைகள் தெரியாமல் கோப்புகளை திருப்பி அனுப்பி வருகிறார்.

துணைநிலை ஆளுநருக்கு கடிதம் எழுதி தெளிவாகக் கூறியுள்ளேன். புதுச்சேரி அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றார். இதுபோன்ற துணைநிலை ஆளுநர் தேவையா என பொதுமக்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன் எனக் கூறியுள்ள முதலமைச்சர் நாராயணசாமி, தொடர்ந்து ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

Also Read: “கொரோனா தடுப்புப் பணிகளுக்காக செலவிடப்படும் தொகையில் மாபெரும் ஊழல்” - தி.மு.க எம்.எல்.ஏ குற்றச்சாட்டு!