India

‘The more i can retain my Identity, the more i can survive’: இயக்குநர் வெற்றிமாறன் சொல்லும் கசப்பான உண்மை

பா.ஜ.க அரசு நாடு முழுவதும் இந்தி மொழியைத் திணிக்கப் பகீரதப் பிரயத்தனம் செய்து வருவது அனைவரும் அறிந்ததே. புதிய தேசிய கல்விக் கொள்கை உள்பட அரசின் அறிவிப்புகள் ஒவ்வொன்றிலும் இந்தி - சமஸ்கிருத மொழித் திணிப்பை கையாண்டு வருகிறது மோடி அரசு.

மேலும், இந்தி பேசும் வட மாநிலத்தவர்கள் மத்தியில் இந்தி பேசுபவர்களே இந்தியர்கள் என்கிற ரீதியில் தவறான கருத்தையும் பா.ஜ.க ஆதரவாளர்கள் விதைத்து வருகின்றனர். இதற்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து அவ்வப்போது தகுந்த பதிலடிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சமீபத்தில் டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு சென்ற தி.மு.க எம்.பி கனிமொழி இந்தி தெரியாது எனக் கூறியதற்காக “நீங்கள் இந்தியரா?” என அங்கு பணியிலிருந்த சி.ஐ.எஸ்.எஃப் பெண் அதிகாரி கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினரிடம் இந்தி ஆதிக்க எண்ணத்தை வெளிப்படுத்திய அதிகாரிக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். பலரும் தாங்களும் இதுபோல அவதிக்கப்பட்டதாக தங்கள் அனுபவங்களை கூறி வந்தனர்.

அந்த வகையில் இயக்குனர் வெற்றிமாறன், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவங்களுக்கு விமானநிலையத்தில் நடந்த அவமதிப்பு தனக்கும் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சமீபத்தில் தனியார் செய்தி நிறுவனத்திற்கு இயக்குனர் வெற்றிமாறன் அளித்த பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியாதாவது, “சமீபத்துல நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி விமானநிலையத்தில் அவங்களுக்கு நடந்த அவமதிப்பு பற்றிச் சொல்லியிருந்தாங்க. எனக்கும் அதேபோல ஒரு சம்பவம் நடந்திருக்கு.

2011-ஆகஸ்ட்ல ‘ஆடுகளம்’ படத்தை கனடா, மான்ட்ரியால் பிலிம் பெஸ்டிவலில் ஸ்கிரீன் பண்ணிட்டு இந்தியாவுக்குத் திரும்ப வர்றோம். டெல்லி ஏர்போர்ட் இமிகிரேஷன்ல இருந்தவர் என்கிட்ட இந்தில பேசினார். ‘ஸாரி... எனக்கு இந்தி தெரியாது’ன்னு ஆங்கிலத்தில் சொன்னேன்.

‘கியா... கியா... யு டோன்ட் நோ மதர் டங் ஆஃப் திஸ் கன்ட்ரி?’ன்னு கேட்டார். நான் ‘என் அம்மா பேசுற மொழி தமிழ். அதுதான் என்னோட தாய்மொழி. மத்தவங்களோட பேச எனக்கு ஆங்கிலம் தெரியும்’னு சொன்னேன்.

ரொம்பக் கோபமாகி, ‘நீங்களாம் இப்படித்தான்... யு தமிழன்ஸ், காஷ்மீரீஸ் ஆர் ஓன்லி பிரேக்கிங் திஸ் கன்ட்ரி... நீங்களாம் தீவிரவாதிங்க’ன்னு என்னவெல்லாமோ பேசி என்னைத் தனியா நிக்கவெச்சிட்டார்.

‘நாங்க கல்ச்சுரல் எக்ஸ்சேஞ்சுக்காக கனடா போயிட்டு வர்றேன்... இந்த வருஷம் இவர் நேஷனல் அவார்டு வாங்கியிருக்கார்’னெல்லாம் என்னுடன் வந்த தயாரிப்பாளர் கதிரேசனும், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷும் சொல்லியும் அவர் கேட்கவேயில்லை.

45 நிமிஷம் என்னைத் தனியா நிக்கவெச்சிட்டு அப்புறம் வேறு ஒரு அதிகாரி வந்துதான் என்னை அனுப்பினாங்க. என் தாய்மொழியை நான் பேசுறது எப்படி நாட்டோட ஒருமைப்பாட்டைச் சீர்குலைக்கும்?

என் தாய்மொழியில் நான் படிப்பது எப்படி நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் ?

The more i can retain my Identity, the more i can survive. நாம வாழணும்னா நம்மோட பண்பாட்டை நாம காப்பாத்தணும். அதுக்காக மற்ற பண்பாட்டுக்கோ, மொழிக்கோ எதிராகச் செயல்படுவது நம்முடைய வேலையோ, நோக்கமோ கிடையாது!” எனத் தெரிவித்தார்.

- வெற்றிமாறன்.

(நன்றி - விகடன்)

Also Read: #CAAProtest : “இது ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமான போராட்டம்” - பா.ரஞ்சித், வெற்றிமாறன் பேச்சு!