India

பயன்படுத்திய கையுறைகளை கழுவி விற்ற கும்பல் - அதிர்ச்சி தகவல்!

பொது இடங்களில் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த முகக் கவசங்களோடு, கையுறைகள் பயன்படுத்துவதும் நமது பாதுகாப்பை உறுதி செய்கிறது. இந்த சர்ஜிக்கல் கையுறைகளை பயன்படுத்த சில வழி முறைகள் உள்ளன. அதை மருத்துவர்களும் அரசாங்கங்களும் தொடர்ந்து மக்களுக்கு எடுத்துக் கூறி வருகின்றனர்.

ஒரு முறை பயன்படுத்திய சர்ஜிக்கல் கையுறையை மீண்டும் பயன்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது. மனித உடலுக்குள் 72 மணி நேரம் நுழையாவிடில், கொரோனா வைரஸ் தானாக அழிந்து போகும். எனவே தான் கையுரையின் வெளிப் பகுதியில் நோய் கிருமி இருக்கலாம் என்பதால், அதில் கை வைக்காத வகையில் பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டிய தேவை உள்ளது.

கையுறைகள், மாஸ்க் மற்றும் PPE உடைகளை முறையாக அப்புறப்படுத்தாததால் நோய் பரவும் அபாயம் உள்ளது என்ற கவலை நீடித்து வரும் நிலையில், மும்பையில் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நவிமும்பை நகரின் கிரைம் பிராஞ்ச் போலிசார் இன்று கும்பல் ஒன்றை கைது செய்துள்ளனர். இந்த கும்பல் செய்த காரியத்தை அறிந்தால் நம் இதயம் அதிர்ச்சியில் உரைகிறது.

பயன்படுத்தப்பட்ட சர்ஜிக்கல் கையுறைகளை சேகரித்து, அதை கழுவி மீண்டும் புதிது போலவே மாற்றி விற்பனை செய்து வந்துள்ளது அந்த கும்பல். ஒன்றல்ல இரண்டல்ல, மூன்று டன் அளவுக்கு பயன்படுத்தப்பட்ட கையுறைகளை அவர்களிடம் இருந்து போலிசார் கைப்பற்றியுள்ளனர்.

இந்த கையுறைகளை எத்தனை நாட்களாக விற்று வருகின்றனர், எத்தனை கையுரைகளை விற்றுள்ளன போன்ற தகவல்கள் குறித்து போலிஸ் விசாரணை நடந்து வருகிறது.