India
தாயின் சடலத்திற்கு பதில் வேறு ஒரு பெண்ணின் சடலத்திற்கு இறுதிச் சடங்கு செய்த போலிஸ்காரர்!
புதுச்சேரி வில்லியனூர் மணவெளி திரிவேணி நகரில் வசிப்பவர் லோகநாதன். இவரது மனைவி குணவேலி (44) கடந்த ஞாயிற்றுக்கிழமை உடல் நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார்.
கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்ற விதிமுறையால், மனைவி சடலத்தை கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு லோகநாதன் கொண்டு வந்தார். அங்கு, மருத்துவர்கள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி விட்டு, சடலத்தை பிணவறைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் இறந்த குணவேலிக்கு கொரோனா தொற்று இல்லை என மருத்துவ பரிசோதனை வந்தது. அந்த சான்றுடன், நேற்று காலை லோகநாதன் மற்றும் அவரது உறவினர்கள் ஆம்புலன்ஸ் உடன் கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு வந்தனர்.
பிணவறைக்கு சென்று பார்த்தபோது குணவேலியின் உடல் இல்லை என்று அங்கிருப்பவர்கள் தெரிவிக்க, உடனே இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடலை தேடினர். இந்நிலையில் கொரோனா தொற்றுடன் இறந்த மற்றொரு பெண்ணுக்குப் பதிலாக குணவேலியின் சடலத்தை மாற்றி தந்தது விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து அரசு மருத்துவமனை நிர்வாகத்தில் இறந்த குணவேலி குடும்பத்தினரிடம், "உடல்நலம் குறைவு காரணமாக இறந்த குணவேலியின் உடல், பிரேத பரிசோதனை அறையில் இருந்தது. அதன் அருகில் தேங்காய்திட்டு பகுதியைச் சேர்ந்த கொரோனா பாதிப்பால் இறந்து போன ஆனந்தாயி (70) உடல் இருந்தது. அவரது உடலைத் தருவதற்கு பதில் குணவேலியின் உடலை தவறுதலாக அளித்து விட்டதாகவும், கருவடிக்குப்பம் இடுகாடுக்கு எடுத்து செல்லப்பட்டு, குணவேலியின் உடல் தகனம் செய்யபட்டுள்ளது" என்று தெரிவித்து, நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டனர்.
குணவேலி குடும்பத்தினர், “எங்கள் வசம் சடலத்தை தரவில்லை என்பதை எழுத்துப்பூர்வமாக தாருங்கள்; பொறுப்புடன் செயல்பட வேண்டிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” கோரினர்.அதைத் தொடர்ந்து உதவி ஆட்சியரிடம் புகாரும் அளித்தனர்.
இதுஇப்படி இருக்க கொரோனா தொற்றுடன் இறந்துபோன ஆனந்தாயி மகன் ஞானசேகர் என்பவர் புதுச்சேரி முத்தியால்பேட்டை காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். அவர் தனது தாயின் சடலத்திற்கு பதிலாக குணவேலி சடலத்திற்கு இறுதிச்சடங்கு செய்துவிட்டு, அஸ்தியை எடுத்துக் கொண்டு தன்வீட்டிற்கு வந்துவிட்டார்.
தான் இறுதிச்சடங்கு செய்தது தனது தாய்க்கு அல்ல என்று தெரிந்ததும் வருத்தமடைந்தார். பிணவறையில் இருக்கும் தனது தாய் ஆனந்தாயி உடலை எடுத்துவந்து மீண்டும் இறுதிச்சடங்கு செய்ய கோரி இருக்கிறார்.
இதனிடையே, சடலங்கள் மாற்றி எரிக்கப்பட்ட சம்பவத்தில், ஆனந்தாயி வீட்டில் உள்ள குணவேலியின் அஸ்தியை தங்களிடம் வாங்கித் தரவேண்டும் என்று குணவேலி குடும்பத்தினர் வலியுறுத்தி உள்ளனர். இந்த விவகாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக இயக்கங்கள் கோரி வருகின்றன.
Also Read
-
ஒன்றிய அமைச்சர்கள் இல்லாத நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டம்! : எதிர்ப்புக்கு பணிந்த ஒன்றிய அரசு!
-
திருப்பரங்குன்றம் - அதிகாரக் குரலில் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் மோகன் பகவத் : மு.வீரபாண்டியன் கண்டனம்!
-
“2026 வெற்றிக்கு அடித்தளமாக ‘இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு’ அமையும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!
-
திராவிட மாடலில் ‘மிளிரும் மகளிர்!’ : மகளிருக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களின் பட்டியல் உள்ளே!
-
2-ம் கட்ட கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விரிவாக்கம்.. விடுபட்ட மகளிர் வங்கிகளில் ரூ.1000 வரவு!