CINEMA THEATER
India

நாடு முழுவதும் மீண்டும் திறக்கப்படும் திரையரங்குகள்..? - கொரோனா பரவலுக்கு விதை தூவும் மோடி அரசு!

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் கேளிக்கை விடுதிகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் என பலவற்றுக்கும் மத்திய அரசு தடை விதித்திருந்தது.

4 மாதங்களாக தொடர்ந்து வந்த இந்த தடைகளுக்கு படிப்படியாக தளர்வு அளிக்கும் வகையில் Unlock செயல்முறைகளை கடந்த ஜூலை மாதத்தில் இருந்து செயல்படுத்தத் தொடங்கியது.

அதன்படி வணிக வளாகங்கள் திரையரங்குகள் தவிர்த்து வழிபாட்டுத் தலங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் தனி கடைகளை திறக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டது.

இருப்பினும் தினந்தோறும் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதும் தொடர்ந்து வருகிறது. எவ்வித தடுப்பு நடவடிக்கைகளையும் மோடி அரசு சரியாக கையாளாததன் விளைவே இது எனவும் குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வருகிற செப்டம்பர் மாதத்துக்கான 4வது அன்லாக் செயல்முறையை அறிவிக்கவுள்ளது மத்திய அரசு. அதில், நாடு முழுவதும் திரையரங்குகளை திறப்பதற்கான வழிமுறைகளை மத்திய அரசுக்கு கொரோனா மேலாண்மை குழு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதில், வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகளைத் தவிர, தனியாக இயங்கும் திரையரங்குகளுக்கு மட்டும் முதற்கட்ட அனுமதி வழங்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும் இரண்டு இருக்கைகளுக்கு இடையே போதிய இடைவெளி அமைத்து டிக்கெட் வழங்குவது, கட்டாய சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது உள்ளிட்ட விதிமுறைகளுடன் அனுமதி வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இது சினிமாத் துறையைச் சேர்ந்தவர்களுக்கும் 5 மாதங்களாக எவ்வித பொழுதுபோக்கினையும் கண்டிராத மக்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய செய்தியாக இருந்தாலும் இதன் மூலம் கொரோனா தொற்று மேலும் பரவுவதற்கான வாய்ப்புகள் பன்மடங்கு அதிகரிக்கும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

Also Read: நாட்டில் 50,000-ஐ கடந்தது கொரோனா பலிகள்.. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரிசையில் தொடரும் மோடி அரசின் சாதனைகள்!