India

‘Anti-National’ என முத்திரை குத்தப்பட்ட ஜாமியா மில்லியா நாட்டில் சிறந்த பல்கலைக்கழகமாக தேர்வு!

மோடி அரசாங்கம் மத்தியில் ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து சிறுபான்மை மக்கள் நலனுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்தது. அந்த நடவடிக்கைகளை கண்டித்து நாடுமுழுவதும் உள்ள ஜனநாயக அமைப்பினர், மாணவர்கள் என பலகட்ட போராட்டத்தை முன்னெடுத்தனர்.

அந்த வகையில், மோடி அரசின் மதப்பாகுபாட்டுடன் கூடிய குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக, ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள் சமரசமின்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த டிசம்பர் மாதம் முதன் முதலில் அமைதி வழி போராட்டத்தை முன்னெடுத்தனர் ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள்.

ஆனால், மாணவர்களின் போராட்டத்தால் நாடுமுழுவதும் எழுந்த எழுச்சியை பொறுத்துக்கொள்ள முடியாத சங்-பரிவார குண்டர்களும், டெல்லி காவல்துறையினரும் பல்கலைக்கழகத் திற்கு உள்ளேயே புகுந்து வன் முறை வெறியாட்டம் நடத்தினர். பல்கலைக்கழக கட்டடங்கள், நூலகங்கள் உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கி, மாணவ- மாணவியரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அதுமட்டுமின்றி, ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகம் தீவிரவாதிகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது, என்று மத்திய ஆட்சியாளர்களே பகிரங்கமாக குற்றம் சாட்டினர். மத்திய அரசின் இத்தகைய குற்றச்சாட்டுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.

இந்நிலையில், ஆட்சியாளர்கள் ‘Anti-National’ என முத்திரை குத்தப்பட்ட ஜாமியா மில்லியா பல்கலைக்கழகம்தான் நாட்டில் சிறந்த பல்கலைக்கழகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2019-20ம் ஆண்டுக்கான மத்திய பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலை மத்திய கல்வித்துறை அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது.

அந்த பட்டியலில், ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் நாட்டின் மிகச் சிறந்த பல்கலைக்கழகமாக வந்துள்ளது. 90 சதவிகித மதிப்பெண்களுடன் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

யு.ஜி, பி.ஜி, பி.எச்.டி மற்றும் எம்.பில் படிப்புகளில் ஒவ்வொரு ஆண்டும் சேர்க்கை பெறும் மாணவர் எண்ணிக்கை, மாணவியரின் விகிதம், பாலின சமத்துவம், பிற மாநிலம் மற்றும் வெளிநாட்டு மாணவர்களுடனான இணக்கம், மாணவ - மாணவியரின் பன்முகத்தன்மை என பல பிரிவுகளில் ஜாமியா மில்லியா பல்கலைக்கழகம் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது.

இதற்கு முன்பு வெளியான தேசிய கல்வி நிலையத் தரவரிசை பட்டியலில், ஜாமியா மில்லியா பல்கலை. 12 ம் இடத்தில் இருந்தது. ஆனால், மத்திய அரசின் குற்றச்சாட்டை எங்கள் கல்வியின் மூலம் பொய்யென நிரூப்பிப்போன் என மாணவர்கள் முயற்சியில் ஒரே அடியாக முதலிடத்தை பிடித்துள்ளது.

அடுத்ததாக அருணாசலப் பிரதேசத்தில் உள்ள ராஜீவ் காந்தி பல்கலைக்கழகம் 83 சதவிகித மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்தையும், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் 82 சதவிகித மதிப்பெண்களுடன் மூன்றாவது இடத்தையும், உ.பி.யிலுள்ள அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் 78 சதவிகித மதிப்பெண்களுடன் நான்காம் இடத் தையும் பெற்றுள்ளன. இந்த பல்கலைக்கழங்கள் அனைத்துமே, மத்திய அரசின் மோசமான திட்டங்களை எதிர்த்து போராடிய பல்கலைக்கழகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.