India

“இந்திதான் அலுவல் மொழியா? வடகிழக்கு, தென்மாநில மக்களுக்கு எப்படி புரியும்?” - சுப்ரீம் கோர்ட் விளாசல்!

அரசு வெளியீடுகள் அனைத்தையும் அரசமைப்புச் சட்டத்தின் 8-வது அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளிலும் வெளியிடும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவர முயற்சிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வு மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையை அனைத்து மொழிகளிலும் வெளியிட வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது சரிதான் என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை 22 மாநில மொழிகளிலும் வெளியிடாத மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

அதற்கு தடைகோரிய மத்திய அரசின் மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணக்கு வந்தது. வழக்கில் ஆஜரான சோலிசிட்டர் ஜெனரல் துஷார்மேத்தா, அரசு வெளியீடுகளை இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் வெளியிட்டால் போதும் என்று அலுவல் மொழி சட்டம் கூறுவதாகத் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் கர்நாடகா போன்ற மற்ற மாநிலங்களில் உள்ள மக்கள் ஏன் மகாராஷ்டிராவின் உள்பகுதியில் உள்ள கிராமக்கள், வடகிழக்கு மாநில மக்கள் ஆகியோர் எப்படி புரிந்து கொள்வார்கள்?

இப்போது மொழி மாற்றத்துக்கான மென்பொருள்கள் எல்லாம் கிடைக்கும் போது அனைத்து மொழிகளிலும் வெளியிட என்ன சிரமம் என்று கேள்வி எழுப்பினர். பின்னர் அனைத்து மொழிகளிலும் ஆவணங்களை வெளியிடும் வகையில் உரிய சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கினர். பின்னர், டெல்லி உயர்நீதிமன்ற அவமதிப்பு நோட்டீசுக்கு இடைக்காலத் தடை விதித்தனர்.

Also Read: EIA2020 வரைவு அறிக்கையின் தமிழ் வடிவம் தயார்தான்; ஆனால் வெளியிட அவகாசம் வேண்டும் - மழுப்பும் மத்திய அரசு!