India

மறைந்த மனைவியின் மெழுகுச் சிலையை புது வீட்டில் வைத்து அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்திய தொழிலதிபர்!

கர்நாடகாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் சமீபத்தில் பங்களா ஒன்றைக் கட்டியுள்ளார். அதன் புதுமனை புகுவிழாவில் அவரது மறைந்த மனைவியின் மெழுகு சிலையை வைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

ஸ்ரீநிவாஸ் மூர்த்தி என்ற அந்த தொழிலதிபரின் மனைவியான மாதவி 3 வருடங்களுக்கு முன்பு மகள்களுடன் திருப்பதிக்குச் சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட விபத்தில் மாதவி உயிரிழந்தார். அவரது மகள்களுக்கு லேசான காயங்களுடன் உயிர்தப்பினர்.

இதன் பின் மனைவியை இழந்த சோகத்திலிருந்த ஸ்ரீநிவாஸ் மூர்த்தி, மனைவியின் கனவான பங்களா ஒன்றைக் கட்டுவது என்று முடிவெடுத்தார். பல்வேறு கட்டிடக் கலை நிபுணர்களை சந்தித்த மூர்த்திக்கு எவருடைய வடிவமைப்பும் பிடிக்கவில்லை. கடைசியாக மகேஷ் ரங்கனடாவரு என்பவரைக் கண்டறிந்தார். அவரே இந்த மெழுகு சிலை வைக்கும் யோசனையையும் மூர்த்தியிடம் தெரிவித்துள்ளார்.

இந்த யோசனை பிடித்துப்போன மூர்த்தி பிரபல பொம்மை தயாரிப்பாளர்களான கோம்பே மேன் என்ற நிறுவனத்தை அணுகி அவரது மனைவியின் முழு உருவச் சிலையைத் தயாரிக்கச் சொல்லியுள்ளார்.

அந்த மெழுகு சிலையை தற்போது மூர்த்தி அவரது புதிய பங்களாவின் வரவேற்பறையில் வைத்துள்ளார். மூர்த்தியின் புதுமனை புகுவிழாவுக்கு வருகை தந்த அனைவரும் உண்மையில் மாதவிதான் அமர்ந்திருக்கிறார் என்று நினைத்துப் பிரமித்துப்போயுள்ளனர்.

Also Read: சென்னை விமான நிலையத்திலிருந்து விரைவில் சர்வதேச விமான சேவை தொடக்கம்? - விமான போக்குவரத்துத்துறை பரிசீலனை!