India

இந்தியாவுக்குள் ஊடுருவும் 'மர்ம விதை' பார்சல்கள் - மத்திய அரசு எச்சரிக்கை!

வெளிநாடுகளிலிருந்து அடையாளம் இல்லாத மர்ம விதைகள் இந்தியாவுக்கு வருவதாக, மத்திய அரசு மாநில அரசுகள், விதை நிறுவனங்கள், ஆராய்ச்சியகங்கள் உள்ளிட்டவற்றை எச்சரித்துள்ளது.

இந்தியாவின் பல்லுயிரியத்தை அச்சுறுத்தும் வகையில் பெயர் அறியாத சந்தேகத்திற்கு இடமான விதைகள் கேட்கப்படாமலேயே இந்தியாவுக்கு வெளிநாடுகளில் இருந்து மர்மமான முறையில் வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான சந்தேகத்திற்கு இடமான விதை பார்சல்கள் உலகம் முழுக்க கடந்த சில மாதங்களாகப் பரவலாக அனுப்பப்பட்டிருப்பதாக மத்திய விவசாயத் துறை தெரிவித்துள்ளது. மாற்றுப் பெயர்களில் மர்ம விதை பார்சல்கள் யாரும் வேண்டாமலேயே அமெரிக்கா, கனடா, பிரிட்டன், நியூசிலாந்து, ஜப்பான் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை அமெரிக்க விவசாயத்துறை ’விவசாய கடத்தல்’ என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த மர்ம விதை பார்சல்கள் ஒரு நாட்டில் இல்லாத வெளிநாட்டுத் தாவர வகைகளின் விதைகளாக இருக்கலாம் எனவும், இவை நோயை உண்டுபண்ணுவதற்கும், ஒரு குறிப்பிட்ட நாட்டின் சுற்றுச்சூழலை கெடுக்கவும், விவசாயத்துக்குப் பாதிப்பை உண்டுபண்ணவும், தேசியப் பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிக்கவும் அனுப்பப்படலாம் எனவும் அமெரிக்க விவசாயத்துறை தெரிவித்துள்ளது.

அதனால் மத்திய அரசு அனைத்து மாநில விவசாய துறைகள், மாநில விவசாய பல்கலைக்கழகங்கள், விதை கூட்டமைப்புகள், விதை சான்றிதழ் முகமைகள், இந்திய விவசாய கவுன்சில் உள்ளிட்டவை விழிப்புடன் இருக்கவேண்டும் என தெரிவித்துள்ளது.

மேலும் இந்த விதைகளை வளரவிட்டு பின்பு எதிர்காலத்தில் அவற்றை கட்டுப்படுத்தப் பாடுபடுவதை விட இப்போதே தடுத்து விடுவது நல்லது எனவும் மத்திய விவசாயத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: ஆறே நாட்களில் 3 லட்சம் பேருக்கு பாதிப்பு : இந்தியாவில் 21 லட்சத்தை எட்டிய கொரோனா தொற்று- அதிர்ச்சி தகவல்!