India

மூணார் நிலச்சரிவில் தமிழர்கள் பலி: மீட்புப் பணிக்கு மத்திய & தமிழக அரசு உதவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்

மூணார் தேயிலைத் தொட்டத்தில் கனமழை காரணமாக நிலச்சரிவில் சிக்கி தமிழர்கள் உயிரிழந்ததற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில், “கேரள மாநிலம் - மூணாறு ராஜமாலா தேயிலைத் தோட்டப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக நிகழ்ந்த மிக மோசமான நிலச்சரிவில் 80-க்கும் மேற்பட்ட தமிழர்கள் மண்ணுக்குள் சிக்கியுள்ளார்கள் என்ற அதிர்ச்சிச் செய்தி கேட்டு தாங்க முடியாத வேதனைக்கு உள்ளானேன்.

இந்தக் கோர நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மண்ணுக்குள் சிக்கியுள்ள மீதியுள்ளோரை உயிருடன் மீட்பதற்குப் போர்க்கால வேகத்தில் பணிகளை மேற்கொள்ளுமாறு மாண்புமிகு கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

இதுவரை மீட்கப்பட்டவர்களுக்கு உரிய மருத்துவ வசதிகளைச் செய்து, அவர்களைப் பாதுகாத்திடவும், உரிய இழப்பீடு வழங்கிடவும், கேரளாவில் உள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் அனைவரும் பாதுகாப்பான சூழலில் வாழ்வதற்கான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் எனவும் முதல்வர் பினராயி விஜயன் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

கேரள அரசுக்கு மீட்புப் பணிகளில் உதவி வேண்டுமெனில் மத்திய அரசும் தமிழக அரசும் உடனடியாகச் செய்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.