India

விடிய விடிய கனமழை; தண்ணீரில் தத்தளிக்கும் மும்பை!

மும்பையில் விடிய விடியப் பெய்த கனமழையால் பல்வேறு இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. 2005-ம் ஆண்டுக்குப் பிறகு அதிக அளவு மழை இப்போதுதான் பதிவாகியுள்ளது என அம்மாநில அமைச்சர் ஆதித்யா தாக்ரே தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு 7 மணிக்கு மழை தொடங்கி, தொடர்ந்து பேய்த கனமழை காலை 5 முதல் 6 மணி வரை கொஞ்சம் மட்டுப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் 230 மில்லி மீட்டர் மழைப் பதிவாகியுள்ளது. மும்பையின் மிதி ஆறு வெள்ளப் பெருக்கெடுத்து நிரம்பியுள்ளது.

மிதி ஆற்றின் நீரின் அளவு பாதுகாப்பு அளவை தாண்டியதால் தாழ்வான பகுதிகளில் உள்ள குடிசைப்பகுதிகளில் உள்ள மக்கள் அவர்கள் வீடுகளை காலி செய்யத்தொடங்கினர். அதன் பின் மீண்டும் தண்ணீர் பாதுகாப்பு அளவை அடைந்ததால் தற்போது மக்களை வெளியேற்றுவதை நிறுத்தி வைத்துள்ளதாக மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது.

மும்பையின் போக்குவரத்து மழையின் காரணமாக முற்றிலும் முடங்கியுள்ளது. பேருந்து தடங்களும் மாற்றப்பட்டுள்ளன. ஆனால் மும்பை விமான நிலைய செயல்பாடுகள் முடங்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் ஒரு பெண் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக மும்பை தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

இதனால் மும்பையில் அனைத்து பொது செயல்பாடுகளும் முடங்கியுள்ளன. மக்கள் மிக அத்தியாவசிய தேவையைத் தவிர எதற்காகவும் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் மும்பையில் ஜூன் மாதம் தொடங்கும் மழைக்காலம் செப்டம்பர் வரை நீடிக்கும். இது பெருமழையைக் கொட்டித்தீர்க்கும். மக்களும் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.