India

EIA வரைவு அறிக்கையை தமிழ் உள்பட 22 மொழிகளில் வெளியிடாமல் ஏமாற்றும் சுற்றுச் சூழல் அமைச்சகம்!

கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்று தொடங்கிப் பரபரப்பாக இருந்த காலகட்டத்தில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு, வரைவு அறிக்கையை வெளியிட்டது (EIA 2020). இந்த அறிக்கையின் மீதான கருத்துக்கள் ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் தெரிவிக்கப்படவேண்டும் என அந்த அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தனியார் நிறுவனங்கள் தொடங்கும் பணிகளுக்கு முன்பாக சில சுற்றுச்சூழல் ஒப்புதல்களை இந்த அமைச்சகத்திடம் பெறவேண்டும். அதாவது அந்த குறிப்பிட்ட பணி எந்த அளவுக்குச் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் என்ற மதிப்பீடு நடத்தப்பட்ட பின்னரே, அப்பணி தொடங்குவதற்கான ஒப்புதல் வழங்கப்படும். மேலும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களின் கருத்தும் கேட்கப்படவேண்டும். அதன் பின்னரே அந்தப் பணியை அரசோ, தனியார் நிறுவனமோ தொடங்கமுடியும். இதைத் தொடர்ந்து அந்த பணி மூலம் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படாத திட்டமா என்பதை ஆராய்ந்து அரசு அதற்கு அனுமதி வழங்கவோ இல்லை மறுக்கவோ செய்யும்.

ஆனால் இந்த நடைமுறையை மாற்றியமைத்துள்ளது இந்த புதிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கை (இ.ஐ.ஏ 2020).இந்த புதிய வரைவு அறிக்கை பொரும் கார்ப்ரேட் நிறுவனங்களுக்குச் சாதகமாக இருப்பதாக மத்திய அரசு மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது, தொடர்ந்து இந்த வரைவு அறிக்கைக்கு எதிராக நாடெங்கும் பல்வேறு மட்டங்களிலிருந்து எதிர்ப்பும் வலுக்கிறது.

வரைவு மசோதா பற்றி பொதுமக்கள் தங்கள் கருத்தை பதிவு செய்ய கொடுக்கப்பட வேண்டிய கால அவகாசம் 30 நாட்களிலிருந்து 20 நாட்களாகக் குறைக்கப்பட்டுவிட்டது.

முன்னதாக தமிழ் உள்பட 22 மொழிகளில் இந்த வரைவு அறிக்கையை வெளியிட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதற்காக கொடுக்கப்பட்ட கால அவகாசமும் முடிந்தது. இப்போது வரை மொழி பெயர்க்கப்படவில்லை. இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வரைவு அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த வரைவு மசோதாவை எளிமையாக மொழிபெயர்த்து, மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்ட Friday For Future, LetIndiabreathe போன்ற இணையதளங்களையும் முடக்கியுள்ளது மத்திய அரசு. எதிர்க்கருத்து தெரிவித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினால் தேச விரோதிகள் என்கிறது மத்திய அரசு.

இதனால் பெரும்பாலான மக்கள் இந்த வரைவு அறிக்கையை படித்து தெரிந்து கொள்ளும் நிலை ஏற்படாமல் போகும். பா.ஜ.க அரசின் நோக்கமும் அதுவாகவே இருக்கிறது. கொரோனா காலத்தில் மக்களின் எதிர்ப்பின்றி அவசர அவசரமாக நிறைவேற்றி விட வேண்டும் என்று நினைக்கிறார்கள். இருப்பினும் பல சூழலியல் இயக்கங்கள் எடுத்துள்ள முயற்சியால், மக்கள் தொடர்ந்து இந்த வரைவு மசோதாவுக்கு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.