India

“மாநில அரசுகளுக்கு ஒதுக்கப்பட்ட உணவு தானியங்கள் எவ்வளவு;முழுமையான பதில் அளிக்கவேண்டும்”- ஐகோர்ட் உத்தரவு

கொரோனா ஊரடங்கால் மஹாராஷ்டிரா மாநிலத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க கோரி வழக்கறிஞர் சூரிய பிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். கடந்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி அடங்கிய அமர்வில் ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, மாநில அரசுகளுக்கு ஒதுக்கப்பட்ட உணவு தானியங்களில் ஒரு சதவீதத்தைக் கூட தமிழக அரசு பயன்படுத்தவில்லை என மத்திய உணவுத்துறை அமைச்சர் கூறியிருந்ததை, மனுதாரர் சூரியபிரகாசம் சுட்டிக்காட்டினார்.

அவரது வாதத்தை மறுத்த அரசுத்தரப்பு வழக்கறிஞர் தமிழகத்தில் 5.66 லட்சம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளதாகவும், சென்னையில் மட்டும் 58,509 புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இவர்களில், 4.60 லட்சம் தொழிலாளர்களுக்கு மே மாதம் 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ எண்ணெய் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஜூன் மாதம் 4.67 லட்சம் தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, தமிழக அரசு மீது மத்திய உணவுத்துறை அமைச்சர் தெரிவித்த குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கமளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க கவுன்சிலிங் மையங்கள் அமைப்பது குறித்தும், வெளிமாநில தொழிலாளர்களுக்கும், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் மனநல ஆலோசனை வழங்குவதற்கான மையங்கள் அமைப்பது குறித்தும் விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மத்திய கூடுதல் தலைமை வழக்கறிஞர் சங்கரநாராயணன் ஆஜராகி , முழுமையான பதில் அளிக்க கால அவகாசம் வேண்டும் என்றும் வழக்கை இரண்டு வாரம் ஒத்தி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதையடுத்து மத்திய அரசுக்கு இரண்டு வார கால அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்துள்ளது.

Also Read: உணவு தானியங்களில் 1% கூட தமிழக அரசு பயன்படுத்தவில்லை - மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!