India

அமெரிக்கா போல் அதிகரிக்கும் தொற்று எண்ணிக்கை: முதல் முறையாக ஒரே நாளில் 40 ஆயிரம் பேர் பாதிப்பு!

கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று.

உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு 14,644,360 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சுமார் 608,911 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர். அதிகட்சமாக அமெரிக்காவில் மட்டும் 3,898,550 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 143,289 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 11 லட்சத்தை தாண்டியுள்ளது. 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 40 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 681 பேர் சிகிச்சையின் போது உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27,503 ஆக அதிகரித்துள்ளது.

அதேப்போல், நாடுமுழுவதும் தற்போது பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,118,107 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ள சூழலில் நாடு முழுவதும் தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பாதிப்பு இன்னும் அதிகரிக்கும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

அதுமட்டுமல்லாது, இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போதுள்ள நிலைமையைவிட மோசமானால் செப்டம்பர் மாதத்துக்குள் 35 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் என ஐ.ஐ.எஸ்.சி கணித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் தினந்தோறும் அதிகரித்த தொற்று எண்ணிக்கையை போல் இந்தியாவிலும் அதிகரிக்க தொடங்கிய நிலையில் கொரோனா கட்டுக்குள் இருப்பதாக பிரதமர் மோடி கூறுவது சரியா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Also Read: கொரோனாவை காரணம் காட்டி இ-சேவை மையங்களை மூடிய அதிமுக அரசு : கல்லூரியில் சேர முடியாமல் தவிக்கும் மாணவர்கள்!