India

“மருத்துவப் படிப்பில் OBC இட ஒதுக்கீடு” - தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்கில் ஜூலை 27ல் தீர்ப்பு!

மருத்துவப் படிப்பிற்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிறபடுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவிகிதம் இட ஒதுக்கீடு கோரி தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்குகளின் விசாரணையை முடித்த சென்னை உயர்நீதிமன்றம், ஜூலை 27ல் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி தி.மு.க, ம.தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

இந்த வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி தொரடப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் ஜூலை 8 ம் தேதி விசாரணைக்கு வர உள்ளதாகவும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டால் 27% இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், மருத்துவ படிப்புகளில் அந்தந்த மாநிலங்களின் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற அனுமதிக்கலாம் எனவும், ஆனால், அந்த இடஒதுக்கீடு மொத்த இடங்களில் 50 சதவீதத்திற்கு மிகாமல் இருக்கவேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டு இருந்தது.

இன்று இந்த வழக்குகள் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி , நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

தி.மு.க தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் பி.வில்சன் வாதம்

உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் விதிப்படி, இட ஒதுக்கீடு தொடர்பாக மாநில அரசு சட்டம் இயற்றாமல் இருந்தால் மட்டுமே மத்திய அரசு முடிவெடுக்க முடியும்.

மத்திய அரசு கவுன்சிலிங் நடத்தும் அமைப்பு மட்டுமே. இட ஒதுக்கீடு தொடர்பாக முடிவெடுக்க மாநில அரசுகளுக்கே முழு அதிகாரம் உள்ளது.

கடந்த 4 வருடங்களில் 3,580 இடங்கள் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டன. இடஒதுக்கீடு வழங்காததால் 2,700-க்கும் மேற்பட்ட OBC தமிழக மாணவர்கள் இடம் பறிபோனது.

இட ஒதுக்கீடு விவகாரத்தில் மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு திருடிக்கொண்டிருக்கிறது.

தமிழக அரசின் சார்பாக ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் வாதம்

தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு முறை இருக்கும்போது மத்திய அரசு 27% இடஒதுக்கீடு வழங்குவது தவறானது.

தமிழகத்தில்தான் அதிகளவில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிறபடுத்தப்பட்ட மக்கள் உள்ளனர்.

ஒவ்வொரு மாநிலத்திலும் சாதி வாரியான மக்கள்தொகை அடிப்படையில் 50% என்ற இடஒதுக்கீடை அதிகரிக்கலாம் என உச்சநீதிமன்றமே தெரிவித்துள்ளது.

எஸ்.சி/எஸ்.டி-க்கு இட ஒதுக்கீடு வழங்கும்போது ஓ.பி.சி பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டை மறுப்பது சட்ட விரோதமானது.

மத்திய அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் வாதம்

மருத்துவ மேற்படிப்புகளில் இட ஒதுக்கீடு முறையைப் பின்பற்றக்கூடாது என இந்திய மருத்துவ கவுன்சில் விதி உள்ளது. Merit அடிப்படையில் மட்டுமே மாணவர்களுக்கு இடம் ஒதுக்கப்படும்.

அதேநேரத்தில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படியே எஸ்.சி/எஸ்.டி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுறது.

மேலும், மருத்துவ மேற்படிப்புகளில் OBC மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க அவசியமில்லை என்பதற்கான பல உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டப்பட்டது.

அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் நிரம்பாமல் இருந்தால், தமிழக அரசுக்கு வழங்கப்படும் என வாதம் முன்வைக்கப்பட்டது.

இதையடுத்து, மாநில அரசுகளின் ஒதுக்கீடு முறையை பின்பற்ற வேண்டும் என்ற முந்தைய உச்சநீதிமன்ற உத்தரவுகளுக்கு ஏன் மத்திய அரசு கட்டுப்படவில்லை கேள்வி எழுப்பிய நீதிபதிகள இந்த வழக்கின் தீர்ப்பு ஜூலை 27ம் தேதி அறிவிக்கப்படும் என உத்தரவிட்டனர்.

Also Read: “தி.மு.க உள்ளிட்ட கட்சிகளின் கடும் எதிர்ப்பு” - பணிந்தது தேர்தல் ஆணையம்!