India

உணவு தானியங்களில் 1% கூட தமிழக அரசு பயன்படுத்தவில்லை - மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

மாநில அரசுகளுக்கு ஒதுக்கப்பட்ட உணவு தானியங்களில் ஒரு சதவீதத்தைக் கூட தமிழக அரசு பயன்படுத்தவில்லை என மத்திய உணவுத்துறை அமைச்சர் கூறியிருந்ததை, மனுதாரர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார் இதனையடுத்து மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கால் மஹாராஷ்டிரா மாநிலத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க கோரி வழக்கறிஞர் சூரிய பிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

கடந்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாநில அரசுகளுக்கு ஒதுக்கப்பட்ட உணவு தானியங்களில் ஒரு சதவீதத்தைக் கூட தமிழக அரசு பயன்படுத்தவில்லை என மத்திய உணவுத்துறை அமைச்சர் கூறியிருந்ததை, மனுதாரர் சூரியபிரகாசம் சுட்டிக்காட்டினார்.

இதையடுத்து, தமிழக அரசு மீது மத்திய உணவுத்துறை அமைச்சர் தெரிவித்த குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கமளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க கவுன்சிலிங் மையங்கள் அமைப்பது குறித்தும், வெளி மாநில தொழிலாளர்களுக்கும், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் மனநல ஆலோசனை வழங்குவதற்கான மையங்கள் அமைப்பது குறித்தும் விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 24ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Also Read: “தீவிரவாத செயல்களுக்காக பணம் செலவிடப்பட்டது” : கேரள தங்கக்கடத்தல் விவகாரத்தில் NIA அதிர்ச்சி தகவல்!