India

“பேரிடரில் கூட சம்பளம் வழங்க மறுப்பதா?” : பா.ஜ.க அரசுக்கு எதிராக பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்!

கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 33,000 தாண்டியுள்ளது. இந்நிலையில் மாநிலத்தில் ஒட்டுமொத்த வைரஸ் தொற்று எண்ணிக்கை 33,418 ஆக உயர்ந்துள்ளது. அதேப்போல் வைரஸ் பாதிப்பால் மாநிலத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 543 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே நாளுக்கு நாள் கர்நாடகாவில் குறிப்பாக தலைநகரான பெங்களூருவில் வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் முறையாக ஊதியம் வழங்கவில்லை என மாநில அரசுக்கு எதிராக அரசு மருத்துவமனையில் பணியாற்றிவரும் பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலம் தாவண்கரே மாவட்டத்தில் தாவண்கரே நகர அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்களாக பணிபுரிந்து வரும் சுமார் 220 மருத்துவர்களுக்கு கர்நாடக அரசு கடந்த 17 மாதங்களாக ஊதியம் அளிக்கவில்லை.

கொரோனா வைரஸ் பரவல் தொடங்கிய நாளிலிருந்து தாங்கள் இடைவிடாது பணிபுரிந்து வருவதாகவும் இந்த காலகட்டத்தில் கூட கர்நாடக அரசு தங்களுக்கு ஊதியத்தை வழங்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ள பயிற்சி மருத்துவர்கள் கடந்த மாதம் 30 ஆம்தேதி முதல் பணியை புறக்கணித்து காலவரையற்ற ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளனர்.

தொடர்ந்து இன்று 12 நாட்களாக இன்றுவரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் பயிற்சி மருத்துவர்கள் தங்களுடைய ஊதிய நிலுவையான சுமார் 8 கோடியை கொடுக்கும் வரை போராட்டம் நீடிக்கும் என்று தெரிவித்துள்ளனர். இதனிடையே தங்களுடைய ஆர்ப்பாட்டத்தை கைவிடாவிட்டால் தங்களை கைது செய்யப்போவதாக மாவட்ட நிர்வாகம் மிரட்டி வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளனர்.

Also Read: 30-59 வயதுக்குட்பட்டவர்களே கொரோனாவால் அதிகம் பலியாகும் அவலம் - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!