India

30-59 வயதுக்குட்பட்டவர்களே கொரோனாவால் அதிகம் பலியாகும் அவலம் - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று.

உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு 12,630,872 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சுமார் 562,888 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர். இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 8 லட்சம் தாண்டியது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 27,114 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 519 பேர் சிகிச்சையின் போது உயிரிழந்துள்ளனர். இதுவரை, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,20,916 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 22,123 ஆக அதிகரித்துள்ளது. கடந்த நான்கு நாட்களில் 1,01,251 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் முதல் கொரோனா பாதிப்பு பதிவாகி ஐந்து மாதங்களுக்கும் மேலான நிலையில், நோய்த்தொற்றால் இறந்தவர்களில் 43 சதவீதம் பேர் 30 முதல் 59 வயதுடையவர்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா நோய் தொற்று தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) மற்றும் மத்திய சுகாதார துறை வெளியிடும் புள்ளி விபரங்களின்படி, நோய்த்தொற்றால் இறந்தவர்களில் சுமார் 43 சதவீதமானோர்கள் 30 முதல் 59 வயதுடையவர்கள்.

அதிலும் குறிப்பாக 45 வயதிற்கு மேற்பட்டோரின் இறப்பு விகிதம் தொடர்ந்து ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறுப்படும். இந்திய மக்கள் தொகை அடிப்படையில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரில் இந்த 45 வயதிற்கு மேற்பட்டோர் 25 சதவீதம் பேராகும் என புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

இவர்களில் உயிரிழப்போரின் விகிதம் 85 சதவீதமாகும். மேலும் இறப்பு விகிதங்களை கணக்கிட்டால் 45 வயதிற்கு மேற்பட்டோரின் உயிரிழப்பு விகிதம் 85 சதவீதமாகும் என தெரியவந்துள்ளது.

இதனையடுத்து இந்த வயதில் பாதிக்கப்பட்டோரை தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளிக்க மருத்துவ குழு அரசுகளுக்கு பரிந்துரைத்துள்ளது.

Also Read: “இந்தியாவில் கொரோனா பாதிப்பு 8 லட்சத்தை தாண்டியது” - 4 நாட்களில் ஒரு லட்சம் பேருக்குப் பாதிப்பு!