India

ஜனநாயகம், மதச்சார்பின்மையை நீக்கிய சிபிஎஸ்இ.. மாணவர்களை ஒடுக்க சதித்திட்டம் தீட்டும் பாஜக அரசு!

உலகம் முழுவதும் கொரோனாவுக்கு எதிரான போராடி வருவதால் "அசாதாரண நிலைமை" காரணமாக 2020-21க்கான பாடத்திட்டங்கள் மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கப்படும் என்று சிபிஎஸ்இ நேற்று அறிவித்தது.

அதன்படி, 9 முதல் 12ம் வகுப்பு வரையில் பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியல் படிப்புகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 11ம் வகுப்பில் உள்ள அரசியல் அறிவியல் பாடத்திட்டத்தில் கூட்டாட்சி, குடியுரிமை, தேசியவாதம், மதச்சார்பின்மை பகுதிகள் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. அதேபோல, இந்தியாவில் உள்ளாட்சி நிர்வாகத்தின் வளர்ச்சியும் நீக்கப்பட்டுள்ளது.

12ம் வகுப்பு அரசியல் அறிவியலில் இருந்து சமகால உலகின் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்கள், இந்தியாவில் சமூக மற்றும் புதிய சமூக இயக்கங்கள் மற்றும் பிராந்தியம் குறித்த விழைவும், திட்டமிடப்பட்ட வளர்ச்சி என்ற பாடத்திலிருந்து இந்திய பொருளாதார வளர்ச்சியின் தன்மை மாற்றம், ஐந்தாண்டு திட்டங்கள், திட்ட ஆணையம் ஆகியவை நீக்கப்பட்டுள்ளன.

அதேபோல, இந்திய வெளியுறவுக் கொள்கை பாடத்தில் இருந்து பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், இலங்கை மற்றும் மியான்மர் ஆகிய அண்டை நாடுகளுடனா இந்தியாவின் உறவுகள் போன்ற பாடங்களும் நீக்கப்பட்டுள்ளன.

மேலும் 9ம் வகுப்பு அரசியல் அறிவியலில் இருந்து இந்திய அரசியலமைப்பின் ஜனநாயக உரிமைகள், கட்டமைப்பு மற்றும் பொருளாதார பாடத்தில் இருந்து இந்திய உணவு பாதுகாப்பு குறித்த பகுதி நீக்கப்பட்டன. அதேபோல 10ம் வகுப்பில் ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மை, சாதி, மதம், பாலினம் மற்றும் ஜனநாயகத்திற்கு சவால்கள் பற்றிய அத்தியாயங்கள் நீக்கப்பட்டன.

இவ்வாறு பள்ளிக் கல்வியில் படித்து அறிந்துக்கொள்ளவேண்டிய அனைத்து முக்கியத்துவம் வாய்ந்த பாடங்களையும் மத்திய அரசு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து நீக்கியுள்ளது. அண்மைக்காலங்களாக அரசின் பல்வேறு மோசடி திட்டங்கள் மற்றும் சட்டங்களை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். இதுபோன்று எதிர்காலத்திலும் நடந்திடக் கூடாது எனும் நோக்கில் மாணவர்களை ஒடுக்கவே இவ்வாறு பாடத்திட்டங்களை மத்திய அரசு நீக்கியுள்ளது என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

Also Read: ரிசர்வ் வங்கி கஜானாவுக்கு வேட்டு வைக்கும் மோடி அரசு.. உபரி நிதியை பெற ராணுவத்தை வைத்து புது திட்டம்?