India

"நவம்பர் மாதம் வரை இலவச ரேஷன் பொருட்கள்.. மக்கள் ஊரடங்கு விதிகளை பின்பற்ற வேண்டும்” - பிரதமர் மோடி உரை!

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 5.70 லட்சத்தை நெருங்கியுள்ளது. வைரஸ் பரவலை தடுக்க, ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

அதேநேரம், இந்திய - சீன எல்லைப் பகுதியில், பதற்றமான சூழல் நிலவி வருகிறது. சமீபத்தில், சீன இராணுவம் நடத்திய தாக்குதலில், 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, இன்று மாலை, 4 மணிக்கு, நாட்டு மக்களிடம் உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே சற்று முன்பு உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,

“இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு விகிதம் மிகவும் குறைவாகவே உள்ளது.சரியான நேரத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் லட்சக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டன.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தக் கொண்டுவரப்பட்ட ஊரடங்கின் இரண்டாம் கட்ட தளர்வு நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது. சிறிய அளவிலான அலட்சியம் கூட உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.

ஊரடங்கு தளர்வு முதல் நிலையில் மக்களின் அலட்சியத்தால் கொரோனா பரவல் அதிகரித்ததை மனதில் கொள்ள வேண்டும். மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அதிகாரிளும் விழிப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும்.

கொரோனாவை எதிர்த்து போராடும் சூழலில் பருவ மழைக்காலம் தொடங்கிவிட்டது. இந்தக் காலகட்டத்தில் காய்ச்சல், சளி உள்ளிட்டவை வரும் என்பதால் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.

ஊரடங்கு விதிகளை மீறி செயல்படுபவர்களை மக்கள் அடையாளம் காண வேண்டியது முக்கியம். ஊரடங்கு விதிகள் விவகாரத்தில் சட்டத்திற்கு மேலாக எந்த ஒரு நபரும் இல்லை.

கிராமப் புறங்களில், வளர்ச்சியை ஏற்படுத்த ரூ,50,000 கோடி செலவில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக கல்யாண் யோஜனா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

ஏழைகள் மேம்பாட்டுக்காக ரூ.1.75 லட்சம் கோடி திட்டத்தை அறிவித்துள்ளது அரசு. 20 கோடி மக்களுக்கு ஜன்தன் வங்கிக் கணக்குகள் மூலம் ரூ.31,000 கோடியை வழங்கி உள்ளோம்.

80 கோடி பேருக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. குடும்ப அட்டைதாரர்களுக்கு மேலும் ஒரு கிலோ கொண்டைக்கடலை வழங்கப்படும்.

இலவச ரேஷன் பொருட்கள் நவம்பர் மாதம் வரை வழங்கப்படும். இந்தத் திட்டத்துக்காகத் தானியங்கள் வாங்க ரூ.90,000 கோடி செலவிடப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: தமிழகத்தில் ஜூலை 31 வரையும் ஊரடங்கு - ஜூலை 6ம் தேதியில் இருந்து தளர்வுகள் அறிவிப்பு!