India
“3 ரூபாய் கடனுக்காக விவசாயியை 15 கி.மீ நடக்க விட்ட வங்கி அதிகாரிகள்” - குவியும் கண்டனம்!
3 ரூபாய் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக விவசாயி ஒருவரை சுமார் 15 கிலோமீட்டர் நடக்க வைத்த வங்கி அதிகாரிகளுக்கு எதிராகக் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
கர்நாடக மாநிலம் பருவே கிராமத்தைச் சேர்ந்த விவசாயி லட்சுமி நாராயணன். இவர் நித்தூரில் உள்ள தனியார் வங்கியில் ரூபாய் 35 ஆயிரம் ரூபாய்க் கடன் பெற்றிருந்தார். இந்தக் கடன் தொகையில் அரசால் தள்ளுபடி செய்யப்பட்டது போக மீதி தொகையை சில வாரங்களுக்கு முன்பு வங்கியில் செலுத்தியிருக்கிறார்.
இந்நிலையில், சமீபத்தில் விவசாயி லட்சுமி நாராயணனைத் தொடர்புகொண்ட வங்கி அதிகாரிகள், மீதமுள்ள கடன் தொகையைச் செலுத்தவேண்டும் என அவரை உடனே வங்கிக்கு வரச் சொல்லியுள்ளனர்.
கடனை திருப்பிச் செலுத்திவிட்டதால் குழப்பமடைந்த அவர், அதிகாரிகள் வற்புறுத்தலால் வங்கிக்குச் செல்ல முடிவெடுத்துள்ளார். ஆனால், ஊரடங்கு காரணமாகப் பேருந்து சேவை இல்லாததால், தனது வீட்டிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரம் நடந்தே வங்கிக்குச் சென்றுள்ளார்.
வங்கிக்குச் சென்று விசாரித்ததில், அவர் மேலும் 3 ரூபாய் 46 பைசாவை உடனே செலுத்தவேண்டும் என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெறும் 3 ரூபாய்க்காக தன்னை 15 கி.மீ நடக்கவைத்ததால் விவசாயி அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்துப் பேசியுள்ள விவசாயி லட்சுமி நாராயணன், “வங்கியிலிருந்து போன் செய்து உடனே வருமாறு கூறியதால் அச்சமடைந்தேன். ஊரடங்கு காரணமாகப் பேருந்து சேவையும் இல்லை. என்னிடம் சைக்கிளும் இல்லை. எனவே 15 கி.மீ நடந்தே வங்கிக்கு வந்தேன்.
நான் கட்ட வேண்டிய 3 ரூபாய் 46 பைசாவுக்காக என்னை அலைக்கழித்துள்ளனர். வங்கி அதிகாரிகளின் இந்த மனிதத்தன்மையற்ற செயல் என்னைக் காயப்படுத்தியது” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தி பரவியதை அடுத்து வங்கி அதிகாரிகளுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
”மதத்தை வைத்து மக்களை திசை திருப்பப் பார்க்கும் மோடி” : பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!
-
”மணிப்பூரில் ஓராண்டாக அமைதியைக் கொண்டுவர மறுத்து விட்ட பா.ஜ.க” : ப.சிதம்பரம்!
-
இன்றுடன் ஓராண்டாக நீடிக்கும் மணிப்பூர் வன்முறை : வேடிக்கை பார்க்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு!
-
வயநாடு தொடர்ந்து மற்றொரு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி : எந்த தொகுதி? என்ன காரணம்?
-
மணிப்பூர் வன்முறை - கைகட்டி வேடிக்கை பார்த்த ஒன்றிய பா.ஜ.க. அரசும் குற்றவாளி அல்லவா? : முரசொலி!