India

சலுகையும் கொடுத்து வட்டிக்கு வட்டியும் வசூலிப்பது என்ன நியாயம்? - மோடி அரசுக்கு சுப்ரீம் கோர்ட் குட்டு!

கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்டு ஊரடங்கால் அனைத்து விதமான தொழில்களும் முடங்கியுள்ளது. ஆகவே, வங்கிகளில் கடன் பெற்றவர்கள் மாத தவணை செலுத்த முதலில் மே மாதம் வரை அவகாசம் வழங்கிய ரிசர்வ் வங்கி, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால், மாத தவணை செலுத்துவதற்கு மேலும் 3 மாதம் அவகாசம் வழங்கியது.

ஆனால், அந்த தவணைகளுக்கான வட்டியை செலுத்துவதில் இருந்து ரிசர்வ் வங்கி விலக்களிக்கவில்லை. ஆகையால், டெல்லியைச் சேர்ந்த கஜேந்திர சர்மா என்பவர் தவணைகளுக்கான வட்டியை வசூலிப்பதில் இருந்து விலக்களிக்க உத்தரவிட வேண்டும் என கோரி வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக ரிசர்வ் வங்கி பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, பதிலளித்துள்ள ஆர்.பி.ஐ தரப்பு, வட்டி செலுத்துவதை தள்ளுபடி செய்தால், வங்கிகளுக்கு 2.10 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். இது, நாட்டின் ஜிடிபியில் ஒரு சதவிகிதமாகும்.

மேலும், இந்த வட்டியை தள்ளுபடி செய்தால், வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளவர்களின் நலனை காக்க முடியாமல் போகும். ஆகவே கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது என கூறியுள்ளது.

Also Read: “3 மாத கடன் தவணை அவகாசத்துக்கும் சேர்த்து வட்டி பெறுவதா?” - ரிசர்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!

அப்போது, மக்களின் சுகாதாரப் பிரச்னையை விட, பொருளாதாரப் பிரச்னையை பெரிதாக பார்க்கக் கூடாது என்றனர். மேலும், அவகாசம் வழங்கப்பட்டுள்ள கால அளவுக்குள் வட்டி வசூலிக்கப்படுமா? மாத தவணை கட்டாத மாதங்களுக்கு வேறு ஏதேனும் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.

இதற்கு மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, நிதித்துறை அமைச்சகத்திடம் ஆலோசனை நடத்தி பதிலளிப்பதாக தெரிவித்தார். அதன் பிறகு இந்த வழக்கு மீண்டும் அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதிட்டார். பின்னர், இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பேரிடர் காலத்தில் கால அவகாசம் வழங்கிய போதும் வட்டிக்கு வட்டி வசூலிப்பது நியாமில்லை. சலுகைக்கான அர்த்தத்தையே இது ஒழித்து விடுகிறது.

சலுகைகள் கொடுக்கப்படும் போது அது பயனுள்ளதாக இருக்க வேண்டும். அனைத்து உரிமைகளையும் வங்கிகளே எடுக்கட்டும் என கூறுவது முறையல்ல. எனவே அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக அரசும், ரிசர்வ் வங்கியும் ஆராய்ந்து உரிய முடிவை எடுக்க வேண்டும்.

அதேபோல, வங்கிகள் சங்கமும் மக்களின் சூழலை புரிந்துக்கொண்டு புதிய நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, வழக்கு விசாரணையை தேதிக் குறிப்பிடாமல் அடுத்த மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.

Also Read: கடனாளிகளின் வட்டியை தள்ளுபடி செய்தால், முதலீட்டாளர்களுக்கு என்ன சொல்வது? -  ரிசர்வ் வங்கி அலட்சிய பதில்!