India

“கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டறிந்ததாக அறிவித்த பதஞ்சலி” - Boycott Patanjali ட்ரெண்டானது ஏன்?

கொரோனா வைரஸால் உலகம் முழுக்க இதுவரை 77 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்கு லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டறியப்படாத நிலையில் வருமுன் காக்கும் நடவடிக்கைகளே தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

கொரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், கொரோனா வைரஸை அழிக்கக்கூடிய தடுப்பு மருந்தினை கண்டறிய உலகம் முழுவதும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தியாவில் சித்தா, ஆயுர்வேதா ஆகிய மருத்துவ முறைகளிலும் கொரோனாவுக்கு எதிரான மருந்துகள் கண்டறியும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கொரோனா வைரஸை தடுக்கும் ஆயுர்வேத மருந்து ஒன்றைக் கண்டறிந்துள்ளதாகப் பதஞ்சலி நிறுவனம் அறிவித்துள்ளது.

பதஞ்சலி நிறுவனம் கண்டறிந்த மருந்தைக் கொரோனா பாதித்தவர்களுக்குக் கொடுத்து சோதித்துப் பார்த்ததில் 5 முதல் 14 நாட்களில் அனைவரும் முழுமையாகக் குணமடைந்ததாக, அந்நிறுவன சி.இ.ஓ ஆச்சார்யா பால்கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

கொரோனாவுக்கு பதஞ்சலி நிறுவனம் தடுப்பு மருந்து கண்டுபிடித்ததாக தகவல் வெளியானதையடுத்து, உலகம் முழுக்க பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களும் இணையத்தில் இதுதொடர்பாகத் தேடி வருகின்றனர்.

இதற்கிடையே, பதஞ்சலி நிறுவன தயாரிப்பை புறக்கணிக்க வலியுறுத்தும் ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டானது. பதஞ்சலி நிறுவனத்தின் CEO ஆச்சார்யா பால்கிருஷ்ணா நேபாளத்தைச் சேர்ந்தவர் என்பதால், நேபாளம் - இந்தியா இடையே நிலவும் எல்லை பிரச்னை காரணமாக பதஞ்சலி பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Also Read: 277 கொரோனா நோயாளிகள் மாயம்.. தேடுதல் வேட்டையில் போலிஸ்.. சென்னையில் சமூக பரவலே இல்லையென மழுப்பும் அரசு!