India

தாராவியில் கட்டுக்குள் கொரோனா பரவல்.. கேரளா பாணியில் சாதித்த மராட்டியம்.. உதவிய #ChaseTheVirus!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தினந்தோறும் பாதிப்பு சமீப நாட்களாக 10 ஆயிரத்தை கடந்து வருகிறது. அதன்படி, 3 லட்சத்து 8,993 பேர் பாதிக்கப்பட்டதை அடுத்து உலக அளவில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இருந்த ஸ்பெயின், இத்தாலி, இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளி 4வது இடத்தில் உள்ளது இந்தியா.

நாட்டிலேயே ஒரு லட்ச கொரோனா பாதிப்பை கண்டுள்ள மகாராஷ்டிர மாநிலத்தில் மும்பையில் மட்டுமே 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைக்கட்டுப்படுத்தும் வகையில் கேரள அரசு Break the chain என்ற திட்டத்தை போன்று மகாராஷ்டிராவில் Chase the virus என்ற திட்டத்தை செயல்படுத்தியுள்ளது அம்மாநில அரசு.

இந்த Chase the virus திட்டத்தால் முதலில் பலனடைந்தது ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவிதான். வெறும் 2.5 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 8 லட்சம் மக்கள் வசிக்கும் இந்த தாராவில் இதுவரை ஆயிரத்து 984 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தேசிய அளவில் கொரோனா பரவுவதற்கு 16 நாட்களாக உள்ள நிலையில் மும்பையில் அது 24.5 நாட்களாக இருக்கிறது. ஆனால் தாராவியில் மட்டும் கொரோனா இரட்டிப்பாவதற்கான காலம் 42 ஆக உள்ளது. ஏனெனில் இதற்கு முக்கிய அடித்தளமாக இருந்தது Chase the virus திட்டம்.

இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரை கண்டறிந்து பரிசோதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரையில் தோராயமாக 4 லட்சம் பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என தாராவியின் பொறுப்பாளர் கிரண் திகாவ்கர் கூறியுள்ளார்.

தாராவியில் 75 பேர் கொரோனாவால் உயிரிழந்திருந்தாலும் பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவிகிதத்தினர் குணமடைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் அடர்த்தி மிகுந்த அந்த பகுதி மிகவும் நெருக்கமான குடியிருப்புகளை கொண்டதாக இருப்பதால் தொடக்கத்தில் தாராவியில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதும் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், மாநில அரசின் சீரிய நடவடிக்கையில் அங்கு கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மும்பைக்கு அடுத்தபடியாக சென்னை மாநகரம் கொரோனாவின் பிடியில் சிக்கித் தவித்து வருகிறது. தாராவியில் மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கை போன்று சென்னையிலும் மேற்கொள்ள சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Also Read: சென்னையில் உச்சமடையும் கொரோனா பரவல் : ஊரடங்கை தீவிரப்படுத்த அரசிடம் என்ன திட்டம் உள்ளது?- ஐகோர்ட் கேள்வி!