India

“5 நாட்களில் 50 ஆயிரம் பேருக்குப் பாதிப்பு” : இனியும் வீண் பெருமை பேசாமல் நடவடிக்கை எடுப்பாரா மோடி?

கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று.

கொரோனா வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உலக நாடுகள் திணறி வருகின்றன. இன்னும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ஊரடங்கு தொடர்கிறது. உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு 7,086,003 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சுமார் 4,06,107 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட இந்த மூன்றரை மாதங்களில் பாதிப்பு 2,56,611 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 9,983 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 206 பேர் பலியாகியுள்ளனர். தொடர்ந்து கடந்த 11 நாட்களாக உயிரிழப்பு நூற்றுக்கு மேல் பதிவாகிவருகிறது. இதையடுத்து, நாடு முழுவதும் மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 7,135 ஆக அதிகரித்துள்ளது.

அதே நேரத்தில் 1,24,094 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு மிக குறைவான எண்ணிக்கையில் இருப்பது சற்றே ஆறுதலாக இருந்தாலும் கடந்த 5 நாட்களில் 50 ஆயிரம் பேருக்குப் பாதிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் ஊரடங்கைத் தளர்த்தியதே நோய்த் தொற்று அதிகரிக்க காரணம் என மருத்துவ வல்லுநர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மருத்துவர் மற்றும் சுகாதாரத்துறை வல்லுர்கள் கருத்தை ஏற்றுக்கொண்டு வீண் பெருமை பேசாமல் பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Also Read: “கறுப்பின மக்களை அடிமை வியாபாரம் செய்தவனின் சிலை அடித்து நொறுக்கப்பட்டது”: இங்கிலாந்தில் பரவும் போராட்டம்