India

“பா.ஜ.க அரசின் திட்ட பெயரில் போலி இணையதளம்” - டெல்லியை சுற்றி 4,200 பேரிடம் பண மோசடி!

போலி இணையதளங்கள் மூலம் அப்பாவி மக்களிடம் மோசடி செய்வது அதிகரித்து வருகிறது. அந்தவகையில் பா.ஜ.க அரசின் திட்டத்தின் பெயரில் போலி இணையதளம் உருவாக்கி மோசடி செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தின் பெயரில் 4,200 பேரிடம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் பெயரில் போலி இணையதளம் துவங்கி டெல்லியில் பலரிடம் ரூ.300 முதல் ரூ.500 வரை வசூல் செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தின் பெயரில் இணையதளம் போலியாக உருவாக்கப்பட்டுள்ளது. அதில், செவிலியர் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களுக்கானப் பணிகளுக்கு ஆள் எடுப்பதாகக் கூறி அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

இதைப் பார்த்து ஏமாந்த டெல்லி மற்றும் அதன் சுற்றுப்பகுதியிலுள்ள பலர் பணிகளுக்காக விண்ணப்பித்துள்ளனர். அவர்களிடம் பதிவுத்தொகையாக பணிகளுக்கேற்ப ரூ.300 மற்றும் ரூ.500 செலுத்தும்படி கூறி வசூல் செய்யப்பட்டுள்ளது.

இப்படி சுமார் 4200 பேர் ஏமாற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மீதான புகாரில் ஒரு பெண் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் டெல்லி சைபர் க்ரைம் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல, மத்திய விவசாயத்துறை அமைச்சகத்தின் பெயரில் போலி இணையதளம் உருவாக்கி விவசாயிகளிடம் பல்வேறு வகைகளில் மோசடி செய்யப்பட்டது. மத்திய, மாநில அரசுகளின் பெயரில் போலி இணையதளங்கள் உருவாக்கி மோசடி செய்வது சமீபகாலமாக அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.