India

“கொரோனா பரவ ‘நமஸ்தே ட்ரம்ப்’ நிகழ்ச்சியே காரணம்” : மோடி அரசின் மீது சிவசேனா குற்றச்சாட்டு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த கொரோனா வைரஸ் பாதிப்பில் மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, தமிழகம் ஆகிய மாநிலங்கள் மிகுந்த பாதிப்பை சந்திக்கின்றன. இதுவரை 1,80,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் மகாராஷ்டிராவில் மட்டும் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதி்கப்பட்டுள்ளனர். உயிர்பை 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை அழைத்து நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சி நடத்தியதே இந்த பெரும் தொற்றுக்கு காரணம் என சிவசேனா குற்றம்சாட்டியுள்ளது. சிவசோனாவின் இத்தகைய குற்றச்சாட்டு தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முன்னதாக கடந்த ஆண்டு அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் 50 ஆயிரம் அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளியினர் மத்தியில் அமெரிக்க ட்ரம்ப்பும், ஹவுடி மோடி எனும் நிகழ்ச்சி நடத்தினார். அதில் பிரதமர் கலந்துக்கொண்டு ட்ரம்ப்க்காக பேசினார்.

அதனையடுத்து குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் மொதேரா பகுதியில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் புதிய கிரிக்கெட் மைதானத்தில் ‘நமஸ்தே ட்ரம்ப்’ எனும் நிகழ்ச்சியை பிரதமர் மோடி ஏற்பாடு செய்தார். அந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்துக்கொண்டு பேசினார். அந்த நிகழ்ச்சியில் அதிபர் டிரம்ப்பை வரவேற்பதற்காக சுமார் 1 லட்சம் பேரை பிரதமர் கூட்டினார்.

இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக கொரோனா வைரஸ் பரவல் குறித்து சீனா எச்சரித்தது. ஆனால் அதனை அப்போது காதில் வாங்கிக்கொள்ளாமல் பிரதமர் மோடி சிசிஏ வன்முறை மற்றும் நமஸ்தே ட்ரம்ப் பணிகளில் மும்பராமாக இருந்தார். அதன் காரணமாக இந்தியாவிலும் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்தது. அந்த நிகழ்ச்சி முடிந்த அடுத்த மாதம் அதாவது மார்ச் 20-ம் தேதி குஜராத்தில் முதல் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.

இதனையடுத்து இதுதொடர்பாக சாம்னா நாளேட்டில் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் எழுதியுள்ள கட்டுரையில், “கொரோனா வைரஸ் குஜராத் மாநிலத்தில் தீவிரமாக பரவுவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை அழைத்துவந்து மிகப்பெரிய அளவில் மக்களை கூட்டத்தை அழைத்து பிரதமர் மோடி நடத்திய நமஸ்தே ட்ரம்ப் காரணம் என்று கூறுவதை மறுக்க முடியாது.

அதிபர் ட்ரம்ப்புடன் வந்த சில அமெரிக்க அதிகாரிகள் மும்பை, டெல்லிக்கும் சென்று கரோனா வைரஸைப் பரப்பிவி்ட்டார்கள்” என குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், “மகாராஷ்டிராவில் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாததால் சிவசேனா அரசைக் கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டுவருவதாக இருந்தால் நாட்டில் 17 மாநிலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டுவர வேண்டும்.

அதில் பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களும் அடங்கும். மத்திய அரசிடம் கோரோனா பரவலை தடுக்க எந்த திட்டமும் இல்லை; மத்திய அரசின் ஊரடங்கும் தோல்வியிலேயே முடிந்துவிட்டது” என விமர்சித்துள்ளார்.

Also Read: நிறவெறிக்கு எதிராக பெரும் புரட்சிக்குத் தயாராகும் அமெரிக்கா : போராட்டக்காரர்களுடன் இணைந்து போலிஸ் !