India
‘வாழ்த்து அட்டை என நினைத்தால் பா.ஜ.க உறுப்பினர் அட்டை’: மோடியின் செயலால் விரக்தி அடைந்த சலூன் கடைக்காரர்!
மதுரை மேலமடையைச் சேர்ந்தவர் மோகன். இவர் அப்பகுதியில் சலூன் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் இவர் இருக்கும் பகுதியில் உள்ள தினக்கூலித் தொழிலாளர்கள் வேலை இல்லாமல் மிகுந்த சிரமங்களைச் சந்தித்துள்ளனர்.
தினமும் மூன்று வேளை சாப்பாட்டிற்கே வழியில்லாமல் தவித்த மக்களுக்கு உதவி செய்ய மோகன் முன்வந்தார். அதற்காக தனது மகளின் மேற்படிப்பிற்காக சேர்ந்து வைத்திருந்த ரூ.5 லட்சத்தை ஏழை மக்களின் உதவிக்காக செலவு செய்தார்.
அந்தப் பணத்தில் அப்பகுதியில் உள்ள 500 குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான அரிசி, மளிகை மற்றும் காய்கறிகள் தொகுப்பை வழங்கினார். சிறு தொழில் நடத்தி தனது மகளுக்காக சிறுகச் சிறுக சேர்ந்து வைத்த பணத்தை ஏழை மக்களுக்காக உதவிய மோகனுக்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
இந்நிலையில், பிரதமர் மோடி நேற்று தனது மான் கீ பாத் நிகழ்ச்சியில், மோகனின் பெருந்தன்மையான செயலுக்கு தனது பாராட்டைத் தெரிவித்திருந்தார். பிரதமர் மோடியின் வாழ்த்துச் செய்தி ஊடங்களில் பரவியதையடுத்து தமிழக பா.ஜ.கவினர் மோகனை ஈக்களாய்ச் சூழ ஆரம்பித்தனர்.
உள்ளூர் பா.ஜ.க நிர்வாகிகள் மோகன் வீட்டிற்கு சென்று தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அப்போது பா.ஜ.கவின் முக்கிய நிர்வாகிகள் சிலர் மோகன் குடும்பத்திற்கு வாழ்த்துகள் தெரிவித்ததாகவும், அவர்கள் குடும்பத்தோடு பா.ஜ.கவில் இணைந்ததாகவும் கூறிவந்தனர்.
பா.ஜ.கவின் முக்கிய நிர்வாகியால் இயக்கப்படும் கதிர் நியூஸ், மோகன் குடும்பத்தோடு பா.ஜ.கவில் இணைந்ததாக பொய்யான செய்தியை வெளியிட்டது.
இதனையடுத்து மோகன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “நான் பா.ஜ.கவில் குடும்பத்தோடு இணைந்து விட்டதாக கூறுகிறார்கள். பா.ஜ.கவில் சேரவில்லை. அவர்கள் சந்திக்கும்போது வாழ்த்து அட்டை என நினைத்து பா.ஜ.க உறுப்பினர் அட்டையைப் பெற்றுக்கொண்டோம்.
ஆனால், நான் எந்தக் காட்சி சார்பாகவும் இல்லை. என்னை எந்த கட்சிக்குள்ளும் அடைக்கவேண்டாம். பா.ஜ.கவில் இணைந்ததாக செய்திகள் வெளியானதால் எனக்கு மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.
Also Read
-
பழனிசாயின் புலம்பலை மக்கள் நிராகரிப்பார்கள்; 2026 தேர்தலிலும் படுதோல்விதான் : ஆர்.எஸ்.பாரதி அறிக்கை!
-
டி.என்.பி.எஸ்.சி.யில் தேர்வு செய்யப்பட்ட 476 பேருக்கு அரசுப் பணிக்கான நியமன ஆணை! : முழு விவரம் உள்ளே!
-
“எங்களது கருப்பு சிவப்புப் படை உங்களுக்குத் தக்க பாடம் புகட்டும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
2,18,000 மெ.டன் கொள்ளளவிலான 10 நவீன நெல் சேமிப்பு வளாகங்களுக்கு அடிக்கல்! : முழு விவரம் உள்ளே!
-
ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு மாதம் ரூ.12,000 ஓய்வூதியம் : ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!