India

“11 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி - கொரோனாவால் திணறும் இந்திய பொருளாதாரம்” : மத்திய புள்ளியியல் துறை தகவல் !

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மேலும் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் தொழில்கள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள் என அனைத்தும் மூடப்பட்டதால் அரசுக்கு வருவாய் பெருமளவு குறைந்துவிட்டது. இந்த ஊரடங்கால் மக்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர்.

இந்தச் சூழலில் தளர்வுகள் அளித்தாலும் நிறுவனங்கள் முழுமையாகச் செயல்படமுடியாத சூழலே உள்ளது. தொடர்ந்து நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு மற்றும் பொருளாதார பாதிப்பு காரணமாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த 44 காலாண்டுகளில் இல்லாத சரிவை சந்தித்திருப்பதாக மத்திய புள்ளியல் துறை தெரிவித்துள்ளர்.

இதுதொடர்பாக மத்திய புள்ளியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2019-20ம் நிதியாண்டின் கடைசி காலாண்டில் நாட்டின் தயாரிப்புத் துறையின் வளர்ச்சி 1.4 சதவீதமாக பின்னடைவை சந்தித்துள்ளது.

அதேப்போல் கட்டுமானத் துறையின் வளர்ச்சி 2.2 சதவீதம் முடங்கியது. ஒட்டுமொத்த அளவில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஜனவரி மார்ச் காலாண்டில் 3.1 சதவீதமாக குறைந்துள்ளது. அதேபோல், 2019-20-ஆம் நிதியாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.2 சதவிதமாக குறைந்துள்ளது.

அதற்கு முந்தையை 2018-19-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.1 சதவிதமாக இருந்தது. இது கடந்த 44 காலாண்டுகள், அதாவது கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத சரிவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற வழக்கு” : மதச்சார்பற்ற இந்தியாவை சிறுமைப்படுத்த இந்துத்வா கும்பல் சதி!