India

ஒருபுறம் உச்சகட்ட பரவலில் கொரோனா.. மறுபுறம் சர்வதேச விமான சேவை.. மோடி அரசின் 5ம் கட்ட ஊரடங்கு திட்டம்!

இந்தியாவில் கடந்த ஒருவாரமாக கொரோனா பாதிப்பு நாள்தோறும் ஆறாயிரத்துக்கு மேல் உள்ளது. தற்போது நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பேருக்கு சோதனை என்பதை இரண்டு லட்சமாக அதிகரிக்கவும் ஐ.சி.எம்.ஆர் திட்டமிட்டுள்ளது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஊர் திரும்பி வரும் நிலையில் உத்தர பிரதேசம், பிகார், ஜார்கண்ட், ஒடிசா, மாநிலங்களில் சோதனைகளை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெருமளவுக்கு இயல்பு நிலை திரும்பியுள்ள காரணத்தால் மீண்டும் தேசிய அளவில் ஒரு ஊரடங்கு தேவையா என்பது குறித்து மத்திய அமைச்சர்கள் குழு ஆலோசனை நடத்தவுள்ளது. அதன் பிறகு பிரதமர் அலுவலகம் இறுதி முடிவை எடுக்கும் என்று கூறப்படுகிறது.

அடுத்தகட்டமாக ரயில் போக்குவரத்தை அதிகப்படுத்தவும், கட்டுப்பாடுகளுடன் மெட்ரோ ரயில்களை இயக்கவும், வெளிநாட்டு விமானப் போக்குவரத்தை தொடங்கவும் அனுமதி வழங்க மத்திய அரசு திட்டமிடப்பட்டு வருகிறது.

பேருந்துகளை இயக்குவது தொடர்பாக மாநிலங்களே முடிவு செய்து கொள்ள அனுமதி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. மாநில அரசுகளின் கருத்தைக் கேட்ட பின்னர் இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.

மே 30ஆம் தேதி பா.ஜ.க அரசு பெறுப்பேற்று ஓராண்டு முடிவடைகிறது. அதற்கு முன்னதாக ஊரடங்கு நீட்டிப்பது குறித்த முடிவை அறிவிக்க திட்டமிடப்பட்டு வருகிறது. இதற்காக மாநில அரசுகளிடம் கருத்து கேட்ட வரும் வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதனிடையே இமாச்சல பிரதேச அரசு 3 மாவட்டங்களில் மட்டும் ஊரடங்கை ஜூன் 30 வரை நீடித்துள்ளது. கேரளா அரசு இன்று எம்.பி., எம்.எல்.ஏ களுடன் ஆலோசனை நடத்துகிறது. நாளை அனைத்து கட்சிக் கூட்டத்தையும் நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read: "இந்தியாவிலிருந்து ரூ.1.2 லட்சம் கோடி முதலீடுகள் வெளியேற்றம்" - மோடி அரசால் பின்வாங்கிய முதலீட்டாளர்கள்!