India

“ஆர்.எஸ்.பாரதியை கைது செய்தது, அதிகார துஷ்பிரயோகத்தின் உச்சம்” - அ.தி.மு.க அரசுக்கு நாராயணசாமி கண்டனம்!

துணைநிலை ஆளுநர் கிரன்பேடியின் தாமதத்தால், புதுச்சேரி அரசுக்கு கடந்த ஒரு வாரத்தில் பெருமளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசியுள்ள அவர், “பிரதமரின் அறிவிப்பால் விவசாயிகள், தொழலாளர்களுக்கு எந்த பயனும் இல்லை, மின்சாரம் தனியார் மயமாக்குவதை புதுச்சேரி அரசு கடுமையாக எதிர்க்கிறது.

மத்திய அரசு கொரோனா நிதி வழங்குவதில் அரசியல் செய்யக்கூடாது. ஒருவார கால தாமதத்திற்கு பின்னரே கிரன்பேடி, மதுக்கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ளார். இதனால் மாநில அரசுக்கு பெருமளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மஞ்சள் அட்டைதாரர்களுக்கு வரும் வாரத்தில் இலவச அரிசி வழங்கப்படும். புதுச்சேரியில் தற்போது 29 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி தொற்று எண்ணிக்கை கூடி வருவதால், மாநில எல்லைகளில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும்.

ஆர்.எஸ்.பாரதி மீது, அ.தி.மு.க அரசு காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய் வழக்கு தொடுத்துள்ளது. இது தமிழக அரசின் அதிகார துஷ்பிரயோகத்தை காட்டுகிறது. அவர் நிச்சயம் தான் குற்றவாளி இல்லை என நீதிமன்றம் முன்பு நிரூபித்து இப்பிரச்சினையில் இருந்து வெளியே வருவார்” என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Also Read: “எக்குத்தப்பாக எறிய மின் கட்டணம் - கோல்மால் செய்யும் மின் வாரியம்” : மதுரை மக்கள் அதிர்ச்சி!