India

கொரோனா பரிசோதனைக்காக காத்திருந்த தொழிலாளர்கள் மீது கிருமிநாசினி தெளிப்பு - டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்!

கொரோனா ஊரடங்கு தொடங்கியதில் இருந்தே வைரஸ் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் ஊடே, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனுபவித்து வரும் இடர்பாடுகள் ஒவ்வொன்றும் காண்போரை கண்ணீர் வடிக்கச் செய்யும் வகையிலேயே அமைந்துள்ளது.

வேலையில்லாமல், உணவில்லாமல் தவித்து வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல அரசு சார்பில் எவ்வித போக்குவரத்து வசதிகளும் வழங்கப்படாததால் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவுக்கு கால்நடையாகவே நடந்து சென்று கொண்டிருக்கின்றனர்.

அவ்வாறு செல்லும் வழியில் பட்டினி, விபத்து என பல்வேறு இன்னல்களில் சிக்கி தினந்தோறும் பலர் உயிரிழக்கவும் செய்கின்றனர். எப்படியோ போராடி நடந்தே சொந்த ஊருக்கு சென்று சேர்ந்தாலும் கடும் மன உளைச்சல்களுக்கு ஆளாகின்றனர்.

Also Read: “திறந்த லாரியில் இறந்த உடல்களுடன் பயணித்த புலம்பெயர் தொழிலாளர்கள்” : உ.பி அரசின் மனிதாபிமானமற்ற செயல்!

இந்நிலையில், டெல்லியில் இருந்து ஷ்ராமிக் ரயில் மூலம் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு முன், லஜ்பத் நகரில் உள்ள பள்ளிக்கு வெளியே கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக காத்திருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மீது, மாநகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே உத்தர பிரதேசத்தில் இதேபோன்று சம்பவம் நடந்தேறியது. அதேபோல, தலைநகர் டெல்லியிலும் நடந்துள்ளது அரசின் அலட்சியத்தன்மையைக் காட்டுவதாகவும் கண்டனங்கள் எழுந்துள்ளன. மேலும், அது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

தொழிலாளர்கள் மீது மாநகராட்சி ஊழியர்கள் கிருமிநாசினி தெளித்தது குறித்து டெல்லி மாநகராட்சி விளக்கமளித்து கடிதம் வெளியிட்டுள்ளது. அதில், பொது இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் போது இயந்திரத்தில் ஏற்பட்ட அதிக அழுத்தம் காரணமாக தவறுதலாக தொழிலாளர்கள் மீது தெளிக்கப்பட்டிருக்கிறது. அதற்காக அவர்களிடம் டெல்லி மாநகராட்சி மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Also Read: “முஸ்லிம்கள் விற்கும் காய்கறிகளை வாங்காதீர்கள்” - கொரோனா நெருக்கடியில் உ.பி பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு!