India

தனிமை முகாமில் இருக்கச் சொன்ன பெற்றோர்கள் - தற்கொலை செய்து கொண்ட புலம் பெயர் தொழிலாளி!

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எந்த வித ஏற்பாடுகளும் இன்றி ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கால்நடையாகவே தங்கள் சொந்த கிராமத்திற்கு சென்றனர். சுமார் 50 நாட்களுக்கு மேலாக பல்வேறு சிரமங்களை புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பச் செல்ல சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. ஆனால் அதில் முறையான ஏற்பாடுகள் இல்லாததால் பல தொழிலாளர்கள் நடைப்பயணமாக அல்லது சைக்கிள் தங்களது சொந்த ஊர் திரும்புகின்றனர்.

அப்படி சொந்த ஊருக்குச் சென்ற தொழிலாளர்கள் சொந்த கிராமத்தால் ஒதுக்கப்படுவதாக வேதனையடைந்து வருகின்றனர். இந்நிலையில், ஜார்க்கண்டில் தனிமைப்படுத்தலுக்குச் செல்லுமாறு பெற்றோர் வலியுறுத்தியதால் புலம்பெயர்ந்த தொழிலாளி உயிரை மாய்த்துக்கொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் பன்வரி கிராமத்தைச் சேர்ந்தவர் முகேஷ்குமார். 19 வயதான முகேஷ்குமார் மகாராஷ்டிரா மாநிலம் ஷோலப்பூரில் ஒரு இரும்புத் தொழிற்சாலையில் பணியாற்றி முகேஷ்குமார், ஊரடங்கால் வேலையில்லாத நிலையில் அவர் தனது சொந்த கிராமத்திற்கு வந்துள்ளார்.

ஷோலாப்பூரிலிருந்து தனது சொந்த ஊருக்குத் திரும்பி முகேஷ்குமாரை அவரது பெற்றோர்கள் கிராமத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள தனிமைப்படுத்தல் முகாமிற்குச் செல்லுமாறு வற்புறுத்தியுள்ளனர். ஊர் மக்களும் முகேஷ்குமாரை ஒதுக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் மனமுடைந்த முகேஷ்குமார் தனது கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலைசெய்து கொண்டார்.

மகனின் மரணம் குறித்து அவரது தந்தை நாராயணன் கௌடு கூறுகையில், “தனிமைப்படுத்தலுக்கு செல்லுமாறு கூறியதால் எனது மகன் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். சிறிது நேரம் கழித்து என் மனைவி மகனைத்தேடி வெளியே சென்றார் அவர் எங்கள் வீட்டின் அருகிலுள்ள ஒரு மரத்தில் தொங்குவதைக் கண்டார்” என்றார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “கார் மோதி சைக்கிளில் சென்ற புலம் பெயர்ந்த தொழிலாளர் பலி” : மோடி அரசால் தொடரும் அவலம் - அதிர்ச்சி தகவல்!