India
“ஊறுகாய்க்கும் உதவாத ஊக்குவிப்பு திட்டம்” - நிதி அமைச்சர் அறிவிப்பை விளாசும் சி.பி.ஐ!
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்புகளை ஊறுகாய்க்கும் உதவாத ஊக்குவிப்பு திட்டம் என விமர்சித்துள்ளது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் விடுத்துள்ள அறிக்கையில், "பிரதமர் மோடி தொலைக்காட்சி வழியாக 5வது முறையாக நாட்டு மக்களிடம் உரையாற்றியபோது, கொரானா நெருக்கடி காலத்தைச் சமாளித்து, முன்னேற மத்திய அரசு ரூபாய் 20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என ஆரவாரமாக முழங்கினார்.
முழுமையான விபரங்களை இன்று (13.05.2020) நிதியமைச்சர் அறிவிப்பார் என தெரிவித்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார்.
நிதியமைச்சர் ஊக்குவிப்பு திட்டத்தை நாடு முழுவதும் ஆவலுடன் எதிர்பார்த்தது. மாலை 4 மணிக்கு நிதியமைச்சரும், இணை நிதி அமைச்சரும் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் ஊக்குவிப்பு திட்டத்தை அறிவிக்கத் தொடங்கினர்.
இந்திய அரசின் ரூபாய் 200 கோடி மதிப்பு வரையான பணிகளின் ஒப்பந்த ஏலத்தில் சர்வதேச ஒப்பந்ததார்கள் அனுமதிக்காமல் கட்டுப்பாடு விதித்து, உள் நாட்டு ஒப்பந்ததாரர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடிவு எடுத்துள்ளது. சிறு குறு தொழில்கள் முதலீட்டு வரம்புகளை திருத்தி உயர்த்தப்பட்டுள்ளது. இது ஏற்கனவே இருந்த முதலீட்டு வரம்பில் இருக்கும் சிறு குறு நிறுவனங்கள், அவைகளை விட அதிக முதலீட்டு நிறுவனங்களின் போட்டியை எதிர்கொள்ள வேண்டும்.
மின்சார நிறுவனங்களுக்கு ரூபாய் 90.000 கோடியும், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் வீட்டுக் கடன் வழங்க ரூபாய் 30ஆயிரம் கோடியும், வாராக் கடன்கள் பட்டியலில் உள்ள நிறுவனங்களுக்கு புதிய கடன் வழங்க ரூபாய் 50 ஆயிரம் கோடி, பொது முடக்க காலத்தில் நஷ்டம் அடைந்த நிறுவனங்களுக்கு ரூபாய் 20 ஆயிரம் கோடி, சிறு குறு தொழில்களுக்கு பிணையில்லா கடன் ரூபாய் 3 லட்சம் கோடி வழங்கப்படும், பிபிபி திட்டத்தில் உள்ள நிறுவனங்களுக்கு மேலும் 6 மாத கால அவகாசம் தருவது, வரி செலுத்த கால அவகாசம், வரும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான பி.எப். தொகையை 12 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைத்து அரசு செலுத்தும் இதற்காக ரூபாய் 6 ஆயிரத்து 500 கோடி செலவாகும் என்பது உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.
பிரதமரின் அறிவிப்பு ஏற்படுத்திய நம்பிக்கையை நிதியமைச்சர்கள்அறிவிப்பு தகர்த்துவிட்டது. “கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்தது” போல் வங்கி உத்தரவாத நீடிப்பது, கடன் வழங்குவது என்ற அறிவிப்புகள் மட்டுமே இருக்கின்றன. இவைகள் நடைமுறையில் பெரும் பயனளிக்காது என்பதே கடந்த கால அனுபவமாகும்.
இந்த அறிவிப்பில் இரண்டு மாதங்களாக வேலை இழந்து, வருமானம் இல்லாமல் துயர நிலையில் வாழ்ந்து வரும் தொழிலாளர்கள், ஊர் திரும்ப வேண்டும் என 50 நாட்களுக்கு மேலாக நெடுஞ்சாலைகளில், தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில், கதறி அழுது வரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் எதிர்பார்ப்புகள், ஜவுளித்துறையில் கைத்தறி, விசைத்தறி, பின்னலாடை, ஆயத்த ஆடை தொழில்கள் போன்ற பெரும் பகுதியின் உணர்வுகளை நிதியமைச்சர் பிரதிபலிக்கவில்லை.
‘கன்னித் தீவு‘ கதை போல் அறிவிப்புகள் தொடரும் என்ற மற்றொரு அறிவிப்பு தவிர நிதியமைச்சர் வேறு எதுவும் இல்லை. நிதியமைச்சர் ஊக்குவிப்பு ஊறுகாய் அளவுக்கும் உதவாத ஏமாற்றம், பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது என்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“அமலாக்கத்துறை நடத்தும் அவதூறுப் பிரச்சாரத்தை சட்டப்படி எதிர்கொள்வேன்” : அமைச்சர் கே.என்.நேரு பதிலடி!
-
தேசிய நீர் & நீர் பாதுகாப்பில் பொதுமக்கள் பங்களிப்பு விருதுகள்.. முதல்வரிடம் மாவட்ட ஆட்சியர்கள் வாழ்த்து!
-
23 சட்டமன்ற தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள்.. கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!
-
ரூ.98.92 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள் திறப்பு : 68,300 மீனவர்கள் பயன்!
-
கள்ளக்குறிச்சி : பெற்றோரை இழந்துவாடும் 4 குழந்தைகளையும் அரவணைத்துக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!