India

“மும்பை தாராவியில் எப்படி வேகமாகப் பரவியது கொரோனா?” : இந்தச் சூழலிலும் 500 பேருக்கு ஒரே கழிப்பறைதான்!

இந்தியாவின் பொருளாதார தலைநகரம் என்றும் அழைக்கப்படும் மும்பை இன்று கொரோனா தொற்றின் மையப்பகுதியாக அமைந்துள்ளது. இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் முதல் இடத்தில் மகாராஷ்டிர மாநிலம் உள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,063-ஐ கடந்துள்ளது. அங்கு இதுவரை 731 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அதிக இடர்பாடுகளைக் கொண்ட பகுதியில் இருப்பதை மும்பை மாநகராட்சி தேடிக் கண்டறிந்து தனிமைப்படுத்தியுள்ளது.

அதில் முக்கிய பகுதியான மும்பை தாராவியில் கொரோனா பரவியது மும்பை மக்களை மட்டுமல்லாது நாட்டு மக்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் என அனைவரையுமே அதிர்ச்சியடைய செய்துள்ளது. அதற்குக் காரணம் உலகிலேயே அதிக மக்கள் தொகை அடர்த்தி (Population Density) கொண்ட மும்பை தாராவியில் கொரோனா பரவுவது சமாளிக்க முடியாத ஒன்றாக இருக்கும்.

அங்கு ஒரு சதுர கிலோமீட்டருக்கு மூன்று லட்சத்து அறுபதாயிரம் பேர் அங்கு வசிக்கிறார்கள். இந்தியாவின் சராசரி மக்கள் தொகை அடர்த்தி 450 பேராகும். அதுமட்டுமல்லாது, தாராவியில் எல்லாருக்குமே பொது கழிப்பறைதான். ஒரு நாளைக்கு 500-இல் இருந்து 600 பேர் வரைக்கும் ஒரே கழிப்பறையைத்தான் பயன்படுத்துகின்றனர்.

மும்பை தாராவியில் கூலித்தொழில் செய்பவர்களுக்கும், அன்றாட வேலைகளுக்குச் செல்வர்வோருமே வசிக்கின்றனர். இப்படி இருக்கையில் மும்பையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்னர் கொரோனா தொற்றினால் 808 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே தொற்று பரவியது குறித்து ஆய்வு தீவிரப்படுத்தப்பட்டது. அதில், வெளிநாடுகளில் இருந்து வந்த சிலருக்கு கொரோனா தொற்று உறுதியானபோது அவர்கள் வீட்டில் வேலை செய்த தாராவியைச் சேர்ந்தவர்களுக்கு பரவி, அதன் மூலம் அப்பகுதி மக்களுக்கு பரவி இருக்கும் என கண்டறியப்பட்டது.

இந்நிலையில், அரசு அளிக்கும் நிவாரணம் முழுமையாக கிடைக்காத நிலையில் பலர் தங்களது வாழ்வாதாரத்தை தொலைத்து நிர்க்கதியாக நிற்கின்றனர். இந்நிலையில், அரசு சில துரித நடவடிக்கைகளை எடுத்து அம்மக்களைக் காப்பாற்ற வேண்டும்; இல்லையெனில் அங்கு சமூகத் தொற்றாக மாறுவதையும் பெருமளவு உயிரிழப்புகளையும் கட்டுப்படுத்த முடியாது எனபதே மருத்துவ வல்லுநர்களின் கருத்து.

Also Read: “மோடி அரசின் நிர்வாக தோல்வி அம்பலம்” : 20 கோடி ரேஷன் கார்டு பயனாளர்களுக்கு உணவு நிவாரணம் சென்றடையாத அவலம்