India

“மோடி அரசின் நிர்வாக தோல்வி அம்பலம்” : 20 கோடி ரேஷன் கார்டு பயனாளர்களுக்கு உணவு நிவாரணம் சென்றடையாத அவலம்

கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் தீவிரமாக அதிகரித்துள்ளது. இந்தக் கொரோனா பாதிப்பு காரணமாக மூன்றாம் கட்ட ஊரடங்கு உத்தரவு நாடுமுழுவதும் அமலில் உள்ளது. இந்த ஊரடங்கால் இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர்.

அரசின் நிவாரணம் போதாத நிலையில் ஏழை மக்கள் உணவின்றி பெரும் துயரங்களை சந்திக்கின்றனர். இந்த பெரும் துயரங்களுக்கு அரசின் நிவாரணமும் முழுமையாக சென்றடையாததேக் காரணம் என அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில், 20 கோடி ரேஷன் கார்டு பயனாளர்களுக்கு ஏப்ரல் மாதத்திற்கு கொடுக்கவேண்டிய 5 கிலோ தானியங்கள் மற்றும் கூடுதல் ஒதுக்கீட்டைப் பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மார்ச் 26ம் தேதி அன்று நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா தொகுப்பை அறிவித்தார். அப்போது, இரண்டு மாத ஊரடங்கை சமாளிப்பதற்கான அரசாங்கத்தின் ஒரே நிவாரண நடவடிக்கையாக உணவுப் பாதுகாப்பு தொடர்பான வாக்குறுதியை அளித்தார்.

அதன்படி, தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் (என்.எஃப்.எஸ்.ஏ) கீழ் 80 கோடி பயனாளிகள் 5 கிலோ தானியங்களை (கோதுமை அல்லது அரிசி) பெறுவார்கள் என்றும், அதிலும் ஒரு நபருக்கு 5 கிலோ கூடுதலாக ஒதுக்கீடு செய்ப்படும் என்றும், அது அடுத்த மூன்று மாதங்களுக்கு - ஏப்ரல், மே மற்றும் ஜூன் வரை அரசாங்கம் இலவசமாக வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆனால் அவர் அறிவித்தபடி கடந்த ஏப்ரல் மாதத்தில், 20 கோடி பயனாளிகள் 5 கிலோ தானியங்கள் மற்றும் கூடுதல் ஒதுக்கீட்டைப் பெறவில்லை என்று அரசாங்கம் வெளியிட்ட தகவல்களின் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும் அரசு வெளியீட்டு தகவலில், ஏப்ரல் மாதத்தில் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 63 கோடி பயனாளிகளுக்கு கூடுதல் தானியங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தரவு காட்டுகிறது. அதே நேரத்தில் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் 80 கோடி பயனாளிகள் உள்ளனர்.

அந்த 80 கோடி பயனாளிகளுக்கும் பி.எம்.ஜி.கே.பி-யின் கீழ் கூடுதல் தானியங்கள் வழங்கப்பட்டிருந்தால், ஏப்ரல் மாதத்தில் 40.15 லட்சம் மெட்ரிக் டன் தானியங்கள் விநியோகிக்கப்பட்டிருக்கும். ஆனால், அரசாங்க தரவுகளின்படி, ஏப்ரல் மாதத்தில் 30.16 லட்சம் டன் தான் உண்மையில் விநியோகிக்கப்பட்டது. ஆனால், ஏப்ரல் மாதத்தில் பி.எம்.ஜி.கே.பியின் கீழ் சுமார் 25% பயனாளிகள் தங்கள் தானிய ஒதுக்கீட்டைப் பெறவில்லை என்பதேத் தெரிகிறது.

இதில் மிகவும் மோசமாக செயல்படும் மாநிலங்கள் டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகும். அவை 1% பயனாளர்களுக்கு தானியங்களை மட்டுமே விநியோகித்துள்ளன என்று மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் வெளியிட்டுள்ளார்.

அதேப்போல், பெரிய மாநிலங்களில், உத்தரபிரதேசம், கேரளா, ஆந்திரா, அசாம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகியவை பி.எம்.ஜி.கே.பி- கீழ் 95% பயனாளிக்கும் விநியோகித்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.

ஊரடங்கால் வேலையின்மை விகிதம் 7% முதல் இப்போது 27% ஆக உயர்ந்துள்ளதால் பல மில்லியன் பேர் வேலை இழந்துள்ளனர் என்று இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், 20 கோடி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஏப்ரல் மாதத்திற்கு கொடுக்கவேண்டிய 5 கிலோ தானியங்கள் போகாதது, மோடி அரசின் அலட்சியத்தைக் காட்டுகிறது.

அரசு ஊரடங்கு உத்தரவு அறிவிப்பதற்கு முன்பே இதற்கான திட்டத்தை வகுத்து இருக்கவேண்டும். அப்படி எதுவும் செய்யாமல் திட்டத்தை மட்டும் அறிவித்துவிட்டு மக்களுக்கு அதை செயல்படுத்தாமல் இருப்பது பெரும் அலட்சியமாகும். இது மோடியின் வெற்று அறிவிப்பை அம்பலப்படுத்துவதாக சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்துள்ளது.

Also Read: குணமடைந்த கொரோனா நோயாளிகளுக்கு மீண்டும் சோதனை தேவை இல்லையாம் : விபரீதம் தெரியாமல் விளையாடும் மோடி அரசு!